தேர்தலில் கருப்பு பணத்தை வாரியிறைக்கும் கட்சிகள்-தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!
சென்னை: கருப்புப் பணத்தை தேர்தலில் வாரியிறைக்கும் அரசியல் கட்சிகள் மீது தீவிர கண்காணிப்பு செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
இதுகுறித்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மத்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய சுற்றறிக்கையில் தவறான வழிகளில் சம்பாதித்த கருப்புப் பணத்தை தேர்தலில் வாரியிறைக்கும் அரசியல் கட்சிகள் தீவிரமான கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
அனைத்து வேட்பாளர்களுக்கும் வங்கிக் கணக்குகள் உள்ள நிலையில், வங்கிகளும் சேவை அளிக்க தயாராக இருக்கும் நிலையில், ரூபாய் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பண பரிவர்த்தனைகளை அரசியல் கட்சிகள் வங்கிகளின் காசோலை அல்லது டிராப்ட் மூலம் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
தேர்தலில் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், தேர்தல் செலவுகளை கண்காணிக்கவும் இத்திட்டம் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த அக்டோபர் முதல் தேதி இதுதொடர்பாக சில கடுமையான விதிமுறைகளை அறிவித்திருந்தது தேர்தல் ஆணையம். இவற்றை திரும்பப் பெறக்கோரி அரசியல் கட்சிகள் மனு அளித்திருந்த நிலையில், அக்கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம் மிகக் கடுமையான எதிர்வினையாக இந்த கடிதத்தை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பியுள்ளது.