அம்மா உத்தரவால் மழை பெய்ததாக கூறிய கலெக்டர் உட்பட 18 ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னை: தேர்தல் தொடர்பான புகாருக்கு உள்ளான, 18 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாற்றப்பட்ட அதிகாரிகளுக்கு எந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை இன்னமும் தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை.
மழை பாதிப்பில் தமிழகம் தத்தளித்தபோது, முதல்வர் அம்மா உத்தரவுப்படி மழை பெய்ததாக கூறி சர்ச்சைக்குள்ளானவர் சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத்.
இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், சேலம், வேலூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் மீது, ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வந்தன. தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.
இதுபோல பல மாவட்ட எஸ்.பிக்கள் மீதும் புகார் எழுந்தன. இந்நிலையில், தேர்தல் ஆணையம் இன்று அதிரடியாக 18 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இதில் 4 பேர் மாவட்ட கலெக்டர்கள். அதாவது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள், மாவட்ட எ.ஸ்களாக பணியாற்றியவர்கள். எஞ்சிய 9 பேர் டிஎஸ்பி மட்டத்தில் இருப்பவர்களாகும்.
வேலூர் மாவட்ட கலெக்டர் நந்தகோபால் மாற்றப்பட்டு ராஜேந்திர ரத்னுவும், சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் மாற்றப்பட்டு, கார்த்திகேயனும், திண்டுக்கல் கலெக்டர் ஹரிகரன் மாற்றப்பட்டு சத்திய பிரதா சாஹுவும், தேனி மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக நாகராஜனும் ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் எஸ்.பி ராஜேஸ்வரி மாற்றப்பட்டு, மகேஸ்வரியும், சேலம் மாவட்ட எஸ்.பி சுப்புலட்சுமி மாற்றப்பட்டு, அமித்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்ட எஸ்.பி லோகநாதன் மாற்றம் செய்யப்பட்டு பண்டி கங்காதரும், நாமக்கல் மாவட்ட எஸ்.பி, மகேஷ்வரன் மாற்றப்பட்டு சசிமோகனும், திருச்சி மாவட்ட எஸ்.பி உமா மாற்றப்பட்டு நிஷா பார்த்திபனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல சில மாவட்டங்களில் வருவாய் அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றம் செய்துள்ளது.