சட்டசபை தேர்தலையொட்டி டிஜிபி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ள நிலையில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
அதையொட்டி, தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை காவல்துறை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கட்டுப்பட்டு அறையில் ஒரு ஐ.ஜி, ஒரு எஸ்.பி, 2 ஏடிஎஸ்பிக்கள், 2 டிஎஸ்பிக்கள், 6 இன்ஸ்பெக்டர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலுக்கான தேதிகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை, வாக்கு என்னும் மையங்களின் எண்ணிக்கை, பதற்றமான வாக்குச் சாவடிகள், கடந்த சட்டசபை தேர்தலில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்ட இடங்கள், பாதுகாப்புப் பணிக்கு தேவையான காவலர்கள் எண்ணிக்கை போன்ற தகவல்களைத் திரட்டி வருகின்றனர்.
தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.