தேர்தல் வரட்டும் யார் காணாமல் போறாங்கனு பார்க்கலாம்.. விஜயகாந்த் பதிலடி
தேர்தலுக்கு பிறகு காணாமல் போவது யார் என்று தெரியும் என விஜயகாந்த் முதல்வர் எடப்பாடிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
திருவள்ளூர் : கூடிய விரைவில் தேர்தல் வரும் அப்போது அரசியலில் இருந்து காணாமல் போகப்போவது யார் என்று தெரியும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதல்வர் எடப்பாடியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கமல்ஹாசனின் அரசியல் கட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தமிழக அரசியலில் இருந்து விஜயகாந்த் காணாமல் போனது போல, விரைவில் கமலும் காணாமல் போவார் என்று பதிலளித்து இருந்தார்.
இந்நிலையில் நேற்று திருவள்ளூரில் செய்தியாளர்களை விஜயகாந்த் சந்தித்தார். அப்போது, தமிழக அரசு காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்த முடிவை நிறைவேற்றாமல் உள்ளது. என்றும் கட்சிகளிடம் பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும், காவிரி நதிநீர் பிரச்னையில் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அப்போது அவரிடம் முதல்வர் எடப்பாடியின் கருத்து குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஜயகாந்த், கூடிய விரைவில் தமிழகத்தில் தேர்தல் வரும். அப்போது தமிழக அரசியலில் இருந்து காணாமல் போகப்போவது தேமுதிகவா? அதிமுகவா? எனத் தெரியும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.