அஜீத்துக்கு தப்பான விரலில் மை வைத்த தேர்தல் அதிகாரி.. வைரலாகும் போட்டோவால் சர்ச்சை
சென்னை: வாக்களிக்க சென்ற, நடிகர் அஜித்துக்கு ஆள்காட்டி விரலுக்கு பதிலாக நடு விரலில் மை வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரவகுறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர்த்த, தமிழகத்தின் 232 தொகுதிகளில், வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், சென்னை, திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜீத் காலை 7.15 மணிக்கெல்லாம் வரிசையில் காத்திருந்து வாக்கை பதிவு செய்தார்.
அஜீத்துடன், அவரது மனைவி, ஷாலினியும் வந்திருந்து வாக்கு பதிவு செய்தார். வாக்குப்பதிவு செய்த பிறகு, பத்திரிகையாளர்களுக்கு மை வைத்த தனது கை விரலை காண்பித்தார் அஜீத். அப்போதுதான், தவறான விரலில் தேர்தல் அதிகாரி மை வைத்த விஷயம் தெரிய வந்தது.
ஆள் காட்டி விரலில்தான் மை வைப்பது வழக்கம். ஆனால் அஜீத்துக்கோ, நடு விரலில் மை வைத்துள்ளார் அந்த தேர்தல் அதிகாரி.
நடு விரலை மட்டும் உயர்த்தி காட்டுவது, நாகரீகம் இல்லை என்பதால், அனைத்து விரல்களையும் சேர்த்தே நிருபர்களிடம் காட்டி, மாண்பு காத்தார் அஜீத். இந்த புகைப்படம் வைரலாகிவருகிறது.
எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும், பங்கேற்காமல் தவிர்த்து வரும், அஜீத்தை அருகே பார்த்த பரபரப்பில் தேர்தல் அதிகாரி, இவ்வாறு தப்பான விரலில் மை வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.