அப்பாடா ஜெயிச்சிட்டோம்… அதிமுக அமைச்சர்கள் நிம்மதி பெருமூச்சு
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுகவிற்கு சாதகமான முடிவுகள் வெளியாகிவருவதால் அமைச்சர்களின் முகங்கள் பிரகாசிக்கத் தொடங்கியுள்ளன.
தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட நாள் தொடங்கி பயக்காய்ச்சலில் இருந்த அமைச்சர்கள் இப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விடத்தொடங்கியுள்ளனர்.
கடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தின் போது பேசிய முதல்வர் ஜெயலலிதா, 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். டெல்லி செங்கோட்டையை நோக்கி அதிமுக எக்ஸ்பிரஸ் புறப்பட்டு விட்டது என்று அதிமுகவினருக்கு உற்சாகமூட்டினார் அவர்.
35 லட்சியம்
செயற்குழுவில் சொன்னதோடு மட்டுமல்லாது 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் அடங்கிய தேர்தல் பொறுப்பாளர்களையும் அறிவித்தார். கண்டிப்பாக 35 தொகுதிகளிலாவது ஜெயித்தே ஆகவேண்டும் என்று கட்டளையிட்டார் ஜெயலலிதா.
தோற்றால் நடவடிக்கை
சம்பந்தப்பட்ட தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜெயிக்கவில்லை என்றால், அமைச்சர்களோ, மாவட்டச் செயலாளரோ பதவியில் தொடர முடியாது என்று கூறிய ஜெயலலிதா, நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்றும் எச்சரிக்கை செய்தாராம்.
பீதியில் புலம்பிய அமைச்சர்கள்
அக்னி நட்சத்திர வெயில் கிளப்பிய சூட்டைவிட, அம்மா கிளப்பிய அனல் அமைச்சர்களை வெலவெலக்க வைத்தது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் ரிசல்ட் வரும் நாள் வரை உண்ணாமல் உறங்காமல் பீதியிலேயே இருந்துள்ளனர் அமைச்சர்கள்.
தேமுதிக ஜெயிக்கவே கூடாது
அதிமுக அதிக தொகுதியில் ஜெயிப்பது ஒருபுறம் இருக்க, தேமுதிக வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கக்கூடாது என்பதும் அமைச்சர்களுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டாம்.
வெற்றி நிச்சயம்
காரணம் தனித்துப் போட்டியிடத் தயாரா? என்று கேட்டவர் விஜயகாந்த். நம்மால்தான் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். நாம் இல்லாவிட்டால் இந்த சட்டமன்றத்துக்குள் அவர் வந்திருக்கவே முடியாது என்பதை அவருக்குக்குக் காட்ட வேண்டும்' என்பது அமைச்சர்களுக்கு ஜெயலலிதா இட்ட கட்டளை என்கின்றனர்.
அப்பாடா ஜெயிச்சிட்டோம்
தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு சாதகமாகவே வந்து கொண்டிருக்கின்றன. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் 37 தொகுதிகள் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்பதால் நடவடிக்கை இருக்காது என்று அமைச்சர்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர். அமைச்சர்களுடன் மாவட்ட செயலாளர்களும் இப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளனராம்.