ஜெ. சாதனை: தேசிய அளவில் 3வது பெரும் கட்சியாக உருவெடுத்த அதிமுக
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. வெற்றி பெற்ற கட்சிகள் நிலவரங்களை காணும் போது, இந்திய அளவில் மாநிலக் கட்சிகளிலேயே முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகதான் தனிப் பெரும் கட்சியாகத் திகழ்கிறது.
தேசிய அளவில் எடுத்துக்கொண்டால், பாஜக மற்றும் காங்கிரஸைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தை வகிக்கிறது அதிமுக.
37 தொகுதிகளில் முன்னணி
தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் அதிமுக 37 தொகுதிகளில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
தப்பிய பொன்னார், அன்புமணி
அம்மா சுனாமியில் தப்பிப் பிழைத்த பாஜக ஓர் இடத்திலும், பாமக ஓர் இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
தனிப்பெரும் கட்சி
இந்திய அளவில் மாநில கட்சிகளில் அதிமுகதான் தனிப் பெரும் கட்சியாகத் திகழ்கிறது.
அம்மாவுக்கு அடுத்து தீதி
அதிமுகவைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் 33 இடங்களில் வெற்றி பெற்றது.
வசீகரித்த ஜெயலலிதா
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தனது சூறாவளி சுற்றுப் பயணப் பிரச்சாரத்தால் மக்களை வெகுவாகக் கவர்ந்தார். ஹெலிகாப்டரில் போய் மக்களை சந்தித்ததாக எதிர்கட்சிகள் விமர்சனம் செய்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை இலை அலையே மேலோங்கியிருக்கிறது.
திமுக மீதான அதிருப்தி
தமிழகத்தில் திமுக ஓர் இடத்தில்கூட முன்னிலை பெறாதது, அந்தக் கட்சி மத்தியில் அங்கம் வகித்தபோது மேற்கொண்ட செயல்பாடுகள் மீதான அதிருப்தியையே காட்டுகிறது.
மாற்று அணிக்கு ஆதரவில்லை
பாஜக, தேமுதிக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து, வானவில் கூட்டணியை உருவாக்கின. இவை தங்களை மாற்று அணி என்று கூறிக்கொண்டாலும், மக்களின் ஆதரவு இந்த கூட்டணிக்கு கிட்டவில்லை. அனைத்துத் தொகுதிகளிலும் சொற்ப வாக்குகளையே பெற்றிருக்கின்றனர் இந்த கட்சியின் வேட்பாளர்கள்.
சட்டமன்றத் தேர்தலில்
எனவே திமுக, அதிமுகவிற்கு எதிராக சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி நீடிக்கும் என்று கூறிவந்த வானவில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இனி பரிசீலனை செய்வார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அசைக்கமுடியாத வெற்றி
சரியாக ஓர் ஆண்டிற்கு முன்பிருந்தே லோக்சபா தேர்தலுக்கான ஆயத்த வேலைகளை தொடங்கிய ஜெயலலிதா, 40 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கினார். வடக்கு வாஸ்து பார்த்து மேடை அமைத்து பிரசாரம் செய்து மிகப்பெரிய வெற்றியை கைப்பற்றியிருக்கிறார். இதன்மூலம் தேசிய அளவில் அ.இ.அ.தி.மு.கவினை மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக முன்னிலைப்படுத்தியிருக்கிறார்.