செலவு கணக்கில் முறைகேடு செய்தால் வெற்றி பெற்றாலும் செல்லாது…: பிரவீன்குமார்
கோவை: தேர்தல் செலவுகள் தொடர்பான கணக்கை வாக்கு எண்ணிக்கை முடிந்த 30 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். அந்த கணக்கில் ஏதாவது முறைகேடுகள் இருந்தால் அவர்கள் வெற்றி பெற்றவராக இருந்தாலும் அவர்களது வெற்றி தகுதி நீக்கம் செய்யப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் எச்சரித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் கடந்த மாதம் 24-ந் தேதி லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 16-ந் தேதி எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கோவையில் இன்று பயிற்சி நடைபெற்றது.
3000 வழக்குகள்
தேர்தல் தொடர்பாக இது வரை 3 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் 1200 வழக்குகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள வழக்குகளுக்கு வருகிற 16-ந் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
பணத்திற்கு கணக்கு
தேர்தல் பிரசாரத்தின்போது ரூ.10 லட்சத்துக்குறைவான பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தால் பணத்துக்கு உரியவர்கள் அதற்கான கணக்கை தேர்தல் ஆணையத்திடம் காண்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் இருந்தால் அது வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் அதற்கான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
தகுதி நீக்கம்
தேர்தல் செலவுகள் தொடர்பான கணக்கை வாக்கு எண்ணிக்கை முடிந்த 30 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
அந்த கணக்கில் ஏதாவது முறைகேடுகள் இருந்தால் அவர்கள் வெற்றி பெற்றவராக இருந்தாலும் அவர்களது வெற்றி தகுதி நீக்கம் செய்யப்படும். மேலும் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படும்.
ரிசல்ட் தாமதம்
சிவகங்கையில் கடந்த முறை மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது போல் இந்த முறை ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு சுற்றின் போதும் ஏஜென்டுகளிடம் கையெழுத்து பெறப்படும். அதன்பின்னரே அடுத்த சுற்று தொடங்கும். இதனால் ரிசல்ட் அறிவிப்பு தாமதமாகும் என்று அவர் கூறினார்.
பின்னர் பிரவீன்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்தார்.
கேள்வி: வாக்கு எண்ணிக்கை இணையதளத்தில் ஒளிபரப்பப்படுமா?
பிரவீன்: வாக்கு எண்ணிக்கையை இணையதளத்தில் ஒளிபரப்புவதில் சட்டச்சிக்கல் நிறைய உள்ளன. எனவே வாக்கு எண்ணிக்கையை இணைய தளத்தில் ஒளிபரப்புவது சாத்திய மில்லை.
கேள்வி: தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படுமா?
பிரவீன்: தேர்தல் முடிவுகள் வழக்கத்தை விட தாமதமாக தான் அறிவிக்கப்படும். கடந்த முறையை விட 25 சதவீதம் வாக்குச் சாவடிகள் அதிகமாக உள்ளது. அதேபோல் வேட்பாளர்களும் அதிக அளவில் உள்ளனர். இதன் காரணமாக ரவுண்டுகள் அதிகம் இருக்கும், எனவே வழக்கத்தை விட 1முதல் 2 மணி நேரம் தாமதம் ஏற்படும்.
கேள்வி: 144 தடை உத்தரவின் பயன் என்ன?
பிரவீன்: பணப்பட்டு வாடாவை தவிர்க்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 2 நாட்களில் ரூ.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தடை உத்தரவு மிகுந்த பயன் அளிக்கும் வகையில் இருந்தது.
கேள்வி: நோட்டாவில் அதிக வாக்குகள் பதிவாகியிருந்தால் அங்கு முடிவு எப்படி அறிவிக்கப்படும்?
பிரவீன்: வேட்பாளர்களை விட நோட்டாவில் அதிக வாக்குகள் பதிவாகியிருந்தால் 2வது இடம் பிடித்த வேட்பாளர் வெற்றி பெற்றராக அறிவிக்கப்படுவார்.
கேள்வி: 90 சதவீத வாக்குகள் பெற்ற வாக்குச் சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படுமா?
பிரவீன்: பல்லடம், சூலூரில் 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு மறு வாக்கு பதிவு நடத்த சாத்தியமில்லை. ஏதேனும் புகார்கள் வந்தால் பரிசீலிக்கப்படும்.
கேள்வி: நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?
பிரவீன்: நான் ஓய்வு பெற இன்னும் 7 வருடங்கள் உள்ளது .