தேர்தல் சூதாட்டம்.. சென்னையில் பறக்கும்படை அதிரடி சோதனை
சென்னை: தேர்தல் நேர சூதாட்டம் குறித்த தகவலையடுத்து பறக்கும்படையினர் சென்னையில் ஆங்காங்கு அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் ஆட்சியமைக்க போவது, அதிமுகவா, அல்லது திமுகவா என்பதில் பெட் கட்டி பெருமளவுக்கு பணம் புழங்குகிறதாம். அதுபோல, குறிப்பிட்ட தொகுதியில், யார் ஜெயிப்பார்கள் என்பதிலும் பணம் கட்டப்படுகிறது.
ஐபிஎல் சூதாட்ட தரகர்கள், இதிலும் களமிறங்கியுள்ளனர். விரும்பிய கட்சியை வெற்றிபெறச் செய்ய அவர்கள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஊடகங்களில் இந்த செய்தி வெளியான நிலையில், சென்னையில் எழும்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சூதாட்ட தரகர்களை தேடி தேடுதல் வேட்டை நடத்தினர்.
சூதாட்டம் இப்போது உச்சத்தில் இருக்கும் என்பதால், நகரமெங்கும் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.