தேர்தல் விதிமுறை மீறல்: நடிகை குயிலிக்கு பிடிவாரண்டு
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த நடிகை குயிலிக்கு, தேர்தல் விதி மீறல் வழக்கில் திருத்துறைப்பூண்டி கோர்ட் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் நாகை நாடாளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கோபாலுக்கு வாக்குகள் கேட்டு நடிகை குயிலி கடந்த மார்ச் 24-ந்தேதி பிரசாரம் செய்தார்.
புதிய பேருந்து நிலையம் அருகில் மட்டும் பிரசாரம் செய்ய வீடு கட்டும் சங்க தலைவர் வக்கீல் அன்பரசன், போலீஸ் நிலையத்தில் அனுமதி பெற்று இருந்தார். ஆனால் அனுமதி பெற்ற இடத்தை தவிர நகர பகுதியின் பல இடங்களில் அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நாகராஜன் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் நடிகை குயிலி, வக்கீல் அன்பரசன் ஆகிய 2 பேர் மீதும் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். திருத்துறைப் பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இவ்வழக்கின் விசாரணை நேற்று வந்தது. அப்போது நடிகை குயிலி, வக்கீல் அன்பரசன் ஆஜராகவில்லை. அவர்கள் 2 பேருக்கும் நீதிபதி சிவா பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.