லக்கானியிடம் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி விளக்கம்.. விஷாலும் புகார்!
விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சென்னை தலைமை செயலகத்தில் ஆர். கே.நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி சந்தித்து விளக்கம் அளித்தார்.
Recommended Video
சென்னை : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை தேர்தல் அதிகாரி வேலுச்சாமி சந்தித்து விளக்கம் அளித்தார். இதேபோல் நடிகர் விஷாலும் லக்கானியை சந்தித்து புகார் அளித்தார்.
ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த திங்கள்கிழமையுடன் நிறைவுபெற்றது. இதையடுத்து வேட்புமனுக்களை நேற்றைய தினம் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது விஷாலின் வேட்புமனுவை காலையிலிருந்து நிறுத்தி வைத்தனர். பின்னர் மற்ற வேட்புமனுக்களை பரிசீலனை செய்துவிட்டு கடைசியாக விஷாலின் மனுவை பார்வையிட்டனர்.
அப்போது அவரது மனுவில் முன்மொழிந்ததாக கையெழுத்திட்ட இருவர் இது தங்களின் கையெழுத்து இல்லை என்று தெரிவித்தனர். இதனால் அவரது வேட்புமனுவை அதிகாரிகள் நிராகரித்தனர். இதைத் தொடர்ந்து விஷால் சாலைமறியலில் ஈடுபட்டார்.
பின்னர் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தவுடன் அவரது மனுவை ஏற்றுக்க கொள்வதாக அதிகாரி அறிவித்தார். ஆனால் விஷால் வீடு சென்றவுடன் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதை எதிர்த்து ஜனாதிபதி ராம்கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு விஷால் டுவிட்டரில் வேட்புமனு நிராகரிப்பு குறித்து விவரித்துள்ளார். மேலும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தையும் அவர் அணுகியுள்ளார். இதனால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி மாற்றப்படலாம் என செய்தி வந்தது.
இதையே எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தினர். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை வேலுச்சாமி சந்தித்து விஷாலின் வேட்புமனு குளறுபடி குறித்து விளக்கமளித்தார்.
இதேபோல் நடிகர் விஷாலும் ராஜேஷ் லக்கானியை சந்தித்து தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக முறையிட்டார்.