அம்பத்தூர் அருகே புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் சென்ற புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் காயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளுவர் வரை இயக்கப்படும் புறநகர் ரயில் சென்ட்ரலில் இருந்து நேற்று மாலை 4.50க்கு புறப்பட்டது. இந்த வண்டி திருமுல்லைவாயில் ரயில் நிலையம் வந்தபோது கடும் சத்தத்துடன் பிளாட்பாரத்தில் உராய்ந்து நின்றது. உடனே டிரைவர் வண்டியை நிறுத்தினார்.
தண்டவாளம் பராமரிப்பு காரணமாக ரயில்வண்டிகள் குறைக்கப்பட்டதால் கூட்டநெரிசல் ரயில்களில் அதிகம் இருந்தது. இதனால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ரயில் நடைமேடையில் உராய்ந்து நின்றதால் பதற்றமடைந்த பயணிகள் அலறியடித்து வண்டியில் இருந்து இறங்கி ஓடினர்.
இதில் பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் ரயில் சக்கரங்களை சரிபார்த்த பின்னர் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் ரயில் மீண்டும் புறப்பட்டது. இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.