சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயிலில் திடீர் தீ விபத்து
சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட மின்சார ரயில் கோட்டை ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. இதையடுத்து ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதன் காரணமாக கடற்கரை - தாம்பரம் மார்க்கமாக செல்லும் மின்சார ரயில்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. இருப்பினும் ரயில் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.