தமிழகத்தில் மின் இணைப்பு கட்டணங்கள் அதிரடியாக உயர்வு.. புதிய கட்டண விவரம் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் மின் இணைப்பு கட்டணங்கள் அதிரடியாக உயர்ந்துள்ளது. புதிய கட்டண விவரத்தை தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் கடும் நிதிநெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மின் இணைப்பு மற்றும் சேவை கட்டணம், பதிவுக்கட்டணம், வளர்ச்சி கட்டணம், பாதுகாப்பு கட்டணம் ஆகியவை அடங்கிய மின்இணைப்புக்கான தொகையை உயர்த்த தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் மனு அளித்தது.
இதையடுத்து கடந்த மாதம் 25 தேதி சென்னையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது மின்நுகர்வோர்கள் அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்து மனு அளித்தனர்.
மும்முனை இணைப்பு
இதையடுத்து தற்போது தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் புதிய மின் இணைப்பு கட்டண விவரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வீடுகளுக்கு வழங்கப்படும் தாழ்வழுத்த மின் இணைப்பு பெறுவதற்கு 250 ரூபாயில் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.அதேபோல் மும்முனை மின்சார இணைப்பு கட்டணம் ரூ.750-ல் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
மும்முனை இணைப்பு
பொது குடிநீர் இணைப்பு, பொது பயன்பாட்டு விளக்குகளுக்கான கட்டணம் ரூ.250-ல் இருந்து ரூ.500 ஆக உயர்ந்துள்ளது. இதே பிரிவில் மும்முனை இணைப்பு பெறுவதற்கான கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.750 முதல் ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
கட்டணம் உயர்வு
வணிக நிறுவனங்கள், கடைகள் தனியார் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றுக்கும் மின் இணைப்பு கட்டணம் 250 ரூபாயில் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.அதேபோல் மும்முனை மின்சார இணைப்பு கட்டணம் ரூ.750-ல் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
விசைத்தறி கூடங்கள்
விசைத்தறி கூடங்கள், குடிசைத்தொழில்கள் உள்ளிட்டவைகளுக்கு மின் இணைப்பு கட்டணம் 250 ரூபாயில் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.அதேபோல் மும்முனை மின்சார இணைப்பு கட்டணம் ரூ.750 ஆகவே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் கட்டண உயர்வு
அதேபோல் அனைத்து பிரிவு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணம் ரூ.200-ல் இருந்து ரூ.300 ஆக உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வு சனிக்கிழமை(அக்.5) முதல் அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.