பாமக போராட்டத்தில் பரபரப்பு.. ரயில் மீது ஏறி நின்று போராடிய தொண்டர் மீது மின்சாரம் பாய்ந்தது!
Recommended Video
திண்டிவனம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, பாமக சார்பில் திண்டிவனத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் மின்சாரம் தாக்கியதில் தொண்டர் ஒருவர் தீப்பிடித்து தூக்கி வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்த முழு அடைப்பு காரணமாக பல மாவட்டங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பேருந்துகள் பெரும்பாலும் இயக்கப்படவில்லை
காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பட்டாளி மக்கள் கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் திருச்சியில் இரயில் மறியலில் ஈடுப்பட்டனர். அதேபோல கரூரில் இருந்து சேலத்திற்கு சென்ற பயணிகள் ரயிலை மறித்து நாமக்கல் ரயில் நிலையத்தில் 100 க்கும் மேற்பட்ட பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி,பாமக சார்பில் திண்டிவனத்திலும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பாமகவினர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது ஏறி அந்தக் கட்சியின் நிர்வாகி ரஞ்சித்குமார் போராடினார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் உடலில் குப்பென தீப்பற்றி பிளாட்பாரத்தில் தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதற்கட்ட சிகிச்சைகள் முடிந்து ரஞ்சித்குமார் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவதாக பாமகவினர் தெரிவித்துள்ளனர்.