அடக்கொடுமையே.. 'அம்மா' திட்ட அரசு விழாவுக்கு கொக்கி போட்டு மின்சாரம் திருட்டு
திருவள்ளூர்: தமிழக அரசின் வருவாய் துறை சார்பில் நடத்தப்பட்ட, 'அம்மா' திட்ட முகாமில், கொக்கி போட்டு மின்திருட்டு நடந்தது கண்டு ஊர்மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
வருவாய்த் துறை சார்பில், எல்லாபுரம் ஒன்றியம், பனையஞ்சேரி ஊராட்சியில், அம்மா திட்ட முகாம் நடந்தது.
இதில், பட்டா மாற்றம், குடும்ப அட்டை, இலவச வீட்டுமனை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவை கோரி, 50க்கும் மேற்பட்டோர் மனுக்கள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சி, புதிதாக கட்டப்பட்டு, திறப்பு விழா நடத்தப்படாத ஊரக வளர்ச்சித் துறை கட்டடத்தில் நடந்தது. அந்த கட்டடத்திற்கு மின் இணைப்பு பெறாததால், அருகில் இருந்த மின்கம்பத்தில் கொக்கி போட்டு மின்சாரத்தை முறைகேடாக எடுத்தனர்.
இதை பார்த்த பொதுமக்கள் தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர். கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கப்பட்டது புகைப்படத்துடன் நாளிதழ்களில் வெளியாகியுள்ளது. அரசு துறை விழாவுக்கே, அரசு மின்சாரம் திருடப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்படுகிறது.