மின் கட்டண உயர்வை குறைக்காவிட்டால் கட்டணத்தை செலுத்தமாட்டோம்: ஈ.வி.கே.எஸ் பேச்சு
சென்னை: மின் கட்டண உயர்வை திரும்பப் பெறாவிட்டால், மின் கட்டணம் செலுத்தப்போவதில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு இளங்கோவன் பேசியதாவது:
மின் கட்டண உயர்வால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதில் பெரும் முறைகேடு நடக்கிறது.
தமிழகத்தில் மின்சார வினியோகம் சரியில்லை. கிராமங்களில் இருளில் மூழ்கியுள்ளன. கொடுக்கப்படும் மின்சாரத்திற்கும் கட்டணத்தை உயர்த்தியுள்ளது தமிழக அரசு. இது எந்த வகையிலும் நியாயமற்ற செயலாகும்.
உடனடியாக மின் கட்டண உயர்வை ரத்து செய்ய மின்துறை அமைச்சரும், முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் முழுகுவதும் மின் கட்டணத்தை கட்டாமல் புறக்கணிக்கும் போராட்டத்தை காங்கிரஸ் செய்ய வேண்டிவரும். இவ்வாறு அவர் பேசினார்.
மின்கட்டண உயர்வை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் இன்று காங்கிரஸ் கட்சி போராட்டங்களை நடத்தியது.