ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் நிச்சயம்.. அமைச்சர் காமராஜ் அறிவிப்பு
வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள வழங்குவதற்கான நடவடிக்கைள் முழு வீச்சில் நடைபெறும் என்று உணவு மற்றும் நுகர்வோர் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னை எழிலகத்தில் மாவட்டவழங்கல் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களுடன் செவ்வவாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியது: தமிழக சட்டசபையில் ஆளுநரின் உரையில் குறிப்பிட்டபடி தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளுக்குப் பதிலாக புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் துரித கதியில் நடைபெறும்.
இதுவரை, 5 கோடியே 65 லட்சத்து 30 ஆயிரத்து 672 குடும்ப உறுப்பினர்கள் தங்களது ஆதார் அட்டை விவரங்களை ரேஷன் அட்டையுடன் இணைத்துள்ளனர்.
மீதமுள்ள பயனாளிகள் ஆதார் விவரங்களை உடனடியாக பெற்று அங்காடிகளில் உள்ள விற்பனை இயந்திரத்தில் பதிவு செய்ய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுவரை 5 லட்சத்து 41 ஆயிரத்து 540 போலி ரேஷன் அட்டைகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, உணவு பொருள் கடத்தல் தடுப்பு காவல் துறையினரின் கடும் நடவடிக்கையால் இதுவரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 951 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிச்சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலையை தொடர்ந்து கண்காணித்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் நீண்டகாலமாக புதிய ரேஷன் அட்டைகள் வழங்காமல் வெறும் உள்தாள் மட்டுமே ஒட்டப்பட்டு வந்தது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.