ஓ இதுதான் பூத்தா... வால்பாறை வாக்குச்சாவடிக்கு வந்த யானை... மிரண்டு ஓடிய வாக்காளர்கள்!
வால்பாறை: வால்பாறை அருகே வாக்குச்சாவடி ஒன்றில் திடீரென யானை ஒன்று புகுந்ததால், அங்கிருந்த வாக்காளர்கள் மிரண்டு ஓடி ஒளிந்து கொண்டார்கள். பின்னர் வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டி அடித்ததைத் தொடர்ந்து வாக்குப்பதிவு தொடர்ந்தது.
தமிழக சட்டசபைத் தேர்தல் நேற்று நடைபெற்றது. அதன்படி, கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று காலை சாரல் மழை மற்றும் பனிமூட்டமுமாகக் காணப்பட்டதால் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்றது.
ஷேக்கல்முடி, முருகாளி, கல்யாணப்பந்தல், சோலையார் அணை, உருளிக்கல் வாக்குச்சாவடிகள் பனிமூட்டத்தால் சூழப்பட்டிருந்தன. இருந்தபோதிலும் தோட்டத்தொழிலாளர்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். தொலைத்தொடர்பு கிடைக்காத முருகாளி வாக்குச் சாவடியில், வாக்கி-டாக்கி பயன்படுத்தப்பட்டது.
இதேபோல், கேரள எல்லையில் உள்ள சோலையார் அணை வாக்குச் சாவடிக்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு அளித்தனர். யானைகள் நடமாட்டமுள்ள குரங்குமுடி, பன்னிமேடு வாக்குச் சாவடிகளில் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர்.
ஆனபோதும், குரங்குமுடி எஸ்டேட்டில் உள்ள அரசு துவக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் நேற்று காலை யானை ஒன்று புகுந்தது. வாக்களிப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த மக்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பயத்தில் அருகில் இருந்த அறைகளுக்குள் ஓடிச் சென்று அவர்கள் பதுங்கினர்.
உஷாரான போலீசார் மற்றும் வனத்துறையினர் சப்தம் எழுப்பி அந்த யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
அதன்பிறகே நிம்மதி அடைந்த வாக்காளர்கள் மீண்டும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.