சீல் வைக்கப்படும் ரிசார்ட்டுகள்.. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய நீலகிரி கலெக்டர்
முறையின்றி கட்டப்பட்ட 27 கட்டிங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Recommended Video
ஊட்டி: யானைகள் வழித்தடங்களில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள 27 விடுதிகளுக்கு சீல் வைக்க உச்சநீதிமன்றம் 48 மணி நேரம் கெடு விதித்ததையடுத்து, நீலகிரி மாவட்ட ஆட்சியர் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
நீலகிரியில் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதிகள்தான். குறிப்பாக சீகூர் காடுகள் என்னும் பள்ளத்தாக்கு பகுதி உள்ளது. இங்குதான் நிறைய அளவில் யானைகள் நடமாடும். அதேபோல கடநாடு, மசினகுடி, உள்ளத்தி, தெப்பக்காடு, மாவநல்லா, வாழைத்தோட்டம், பொக்காபுரம் போன்ற பகுதிகளும் யானைகள் அதிகளவில் நடமாடும் பகுதிகள் என வனத்துறையால் அறிவிக்கப்பட்ட பகுதிகள். மேலும், இவை முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகள்.
முள்வேலிகள், மின்கம்பிகள்
ஆனால் இங்குள்ள சிலர் விதிமுறைகளை மீறி காட்டேஜ்களை கட்டிவிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட தனியார் ரிசார்ட்கள் இப்படி உள்ளன. யானைகள் நடமாடும் என தெரிந்தும் காட்டேஜ்களை கட்டிவிட்டதுடன், காட்டேஜ்களுக்குள் யானைகள் வந்துவிடக்கூடாது என தடுப்பு சுவர்கள், முள்வேலி, மின்வேலிகளை வேறு போட்டுக் கொண்டனர். யானைகளின் வழித்தடங்கள் மறிக்கப்பட்டது. உணவிற்காக யானைகளால் எங்குமே செல்ல முடியவில்லை. இனப்பெருக்கத்திற்காக இடம்பெயர்ந்து கூட செல்ல முடியாத அவலம் ஏற்பட்டது.
கட்டிடம் அகற்றவில்லை
இதனால் சமூக ஆர்வலர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2010-ல் வழக்கு தாக்கல் செய்தனர். ஆனாலும் விசாரணை நடைபெற்று, கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று, காட்டேஜ், ரிசார்ட்டுக்களின் வேலிகள் மட்டுமே அகற்றப்பட்டன தவிர கட்டிடங்கள் ஏதும் அகற்றப்படவில்லை. இதனால் மனுதாரர் தரப்பினர் உச்சநீதிமன்றம் சென்று, யானைகளின் வழித்தடங்களில் உள்ள ரிசார்ட்களை அகற்ற வேண்டும் என்று முறையிட்டனர்.
48 மணி நேரம் கெடு
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் மதன் பி லோகூர், அப்துல் நசீர், தீபக் குப்தா ஆகிய 3 பேர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள 27 கட்டிடங்களை 48 மணி நேரத்திற்குள் மாவட்ட நிர்வாகம் மூடி சீல் வைக்க வேண்டும் என்றனர். மேலும், 300க்கும் மேல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் உரிமையாளர்கள் அனுமதி பெற்றிருந்தால், அதற்கான ஆவணங்களை 48 மணி நேரத்திற்குள் மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். சான்றுகளை 48 மணி நேரத்தில் அளிக்காவிட்டால் கட்டிடங்களை அகற்ற வேண்டும்' என தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேற்று உடனடியாக அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் நடத்தினர்.
அதிரடி நடவடிக்கை
இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 'ஒன் இந்தியா' சார்பாக கேட்கப்பட்டது. அதற்கு, "யானைகளில் நடமாடும் பகுதிகளான பொக்காபுரம், சிங்காரா, மாயாறு, மசினகுடி போன்ற இடங்களில் முறையின்றி கட்டப்பட்ட 27 கட்டிடங்களுக்கு இன்று நோட்டீஸ் ஒட்ட உள்ளோம். இந்த 27 கட்டிடங்களிலுள்ள பொருட்கள், மற்றும் உடைமைகளை எடுத்துக் கொள்ள இன்று ஒரு நாள் அவகாசம் தருகிறோம். இன்று அனைத்து பொருட்களையும் எடுத்து கொண்டு காலி செய்துவிட்டால், நாளை நாங்கள் 27 கட்டிடங்களையும இழுத்து மூடி சீல் வைப்போம். இதை தவிர மேலும் 12 கட்டிடங்கள் முறையின்றி கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த கட்டிடங்களை இன்னும் இரண்டு நாளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது."
சீல் வைப்பது உறுதி
இவ்வாறு கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது நோட்டீஸ் ஒட்டப்பட்டு விட்டது. காட்டேஜ் உரிமையாளர்களிடம் விசாரணை ஆரம்பமானது. இதேபோல, பிற காட்டேஜ் உரிமையாளர்கள் அனுமதி பெற்றுள்ள சான்றுகளை தற்போது ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்து வருகிறார்கள். அவைகள் விரைவில் பரிசீலனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அத்தகைய காட்டேஜ்கள், விடுதிகளில் விதிமீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி.