நீர் இல்லாத காடுகள்... குடியிருப்புப் பகுதியை முற்றைகையிடும் யானைக் கூட்டம் - வீடியோ
குன்னூர் வனத்துக்குள் விலங்குகள் குடிக்க போதுமான நீர் இல்லாத காரணத்தால், யானைகள் குடியிருப்புப் பகுதிகள் நுழைந்தன. அவற்றை வனத்துக்குள் அனுப்ப வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
குன்னூர்: குன்னூர் குடியிருப்புப் பகுதிகளில் நுழைய முயன்ற யானைக் கூட்டத்தை விரட்ட வனத்துறை அதிகாரிகள் கடுமையாகபோராடி வருகின்றனர். இருந்தாலும் யானைக் கூட்டம் வனத்துக்குள் செல்லாமல் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.
குன்னூர் வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டமாக வெளியேறி குன்னூர் காந்தி நகர், ரன்னிமேடு உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிக்குள் நுழைய முயற்சி செய்து வருகின்றன.
யானைகள் குடியிருப்புக்குள் நுழையும் தகவலை வனத்துறையினருக்கு பொதுமக்கள் தெரிவித்தனர். அதனையடுத்து விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் யானைகளை விரட்ட பட்டாசு கொளுத்திப்போட்டனர்.மேலும் தீப்பந்தங்களை ஏந்தியும் விரட்டினர்.
ஆனால், யானைகள் வனத்துக்குள் செல்லாமல் அடம்பிடித்து அதேபகுதியில் உள்ள தேயிலை காட்டுக்குள் நுழைந்துவிட்டன. அவற்றை வனத்துக்குள் எப்படியாவது அனுப்ப வனத்துறையினர் பாடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுவதின் காரணமாக வனப்பகுதியில் உள்ள சிற்றாறுகள்,ஓடைகளில் நீர் இல்லை. காட்டு விலங்குகளின் நீர் ஆதாரமாக விளங்கிய அவை வற்றிவிட்டதால், நீருக்காக யானைகள் உள்ளிட்ட விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைகின்றன.
வனத்துறையினர், கடும் கோடையில் விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்ற ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிட்டு செய்திருந்தால் விலங்குகள் காட்டை விட்டு நீருக்குகாக குடியிருப்புப்பகுதிகளில் நுழைந்திருக்காது என பொதுமக்கள் கூறுகின்றனர்.