மாயாற்றில் பரிதாபம்.. சேற்றில் சிக்கி உயிரிழந்த 2 யானைகள்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியிலுள்ள பவானிசாகர் வனச்சரகம் பூதிக்குப்பம் காப்புக்காடு செம்பாறை வனப்பகுதியில் உள்ள பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள மாயாற்றில் சில தினங்களுக்கு முன் தண்ணீர் குடிக்க வந்தபோது 12 வயது பெண் யானை ஒன்று சேற்றில் சிக்கியது.
இரண்டு நாட்களாக சிக்கிக்கொண்டிருந்த யானையை மீட்க வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் அந்த பகுதிக்கு வந்த ஒரு யானைக்கூட்டம் சேற்றில் சிக்கி உயிருக்குப் போராடிய பெண்யானையை மீட்க பக்கத்தில் வந்தது.
இந்த கூட்டத்திலிருந்த 15 வயதுடைய ஒரு பெண் யானையும் சேற்றில் சிக்கியது இரண்டு யானைகளையும் ஜெ.சி.பி உதவியுடன் மீட்ட வனத்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக வனப்பகுதியில் வைத்து குளுகோஸ் மற்றும் மருந்துகளை யானைக்கு கொடுத்து அவற்றை கண்காணித்து வந்தனர்.
கடந்த 4 தினங்களாக யானைகளுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வெள்ளிக்கிழமை 2 யானைகளும் உயிரிழந்தன. கால்நடை மருத்துவர் மனோகரன் அதே இடத்தில் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டதில் முதலில் சேற்றில் சிக்கிய 12 வயது பெண்யானை குடற்புழு தாக்கியதால் உயிரிழந்தது தெரிய வந்தது.
இரண்டாவதாக சேற்றில் சிக்கிய 15 வயதுள்ள பெண்யானை கர்ப்பம் தரித்திருந்ததும் அதன் வயிற்றில் சுமார் 22 மாத பெண்குட்டி இறந்த நிலையில் இருந்ததும் தெரிய வந்தது. யானையின் வயிற்றுப்பகுதி அடிபட்டதால் குட்டிக்கு பாதிப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
பின்னர் யானைகளின் சடலங்கள் அதே இடத்தில் புதைக்கப்பட்டன. நான்கு நாட்களாக யானைகளுக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவர்களும் சேற்றிலிருந்து மீட்க உதவிய 50க்கும் மேற்ப்பட்ட மலைவாழ் மக்களும் கண்ணீர் சிந்தினர்.
2 Elephants struggled in a down more than 4 days. Forest department tried to save the elephants. But, both elephants were died.