திருக்குவளை கோவிலில் 1,000 ஆண்டு பழமையான மரகதலிங்கம் மாயம்... பக்தர்கள் அதிர்ச்சி!
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்த மரகத லிங்கம் காணாமல் போனதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாகப்பட்டினத்தை அடுத்த திருக்குவளையில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. 3000 ஆண்டுகள் பழமையான கோவில் இது என்று சொல்லப்படுகிறது. இந்தக் கோவிலில் உள்ள மரகத லிங்கம் பிரசித்து பெற்றது. சப்த விடங்களில் ஒன்றான இக்கோவிலில், 'அவனி விடங்கர்' என்றழைக்கப்படும் மரகதலிங்கத்தை, பிரம்மா, அகத்தியர், பஞ்ச பாண்டவர்கள் உட்பட பலர் வழிபட்டதாக ஐதீகம் உள்ளதாக நம்பப்படுகிறது.
இவ்வளவு சக்தி கொண்ட இந்தக் கோவிலில் இருந்த மரகதலிங்கத்தை நேற்று மாலை யாரோ திருடிச் சென்றுள்ளனர். வழக்கம் போல் நேற்று மாலை கோவிலுக்கு வந்த அர்ச்சகர் கணேசன் மரகதலிங்கம் காணாமல் போயுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது பற்றி, கோவில் நிர்வாகத்திற்கு தகவல் அளித்தார். கோவில் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் எஸ்.பி., துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, விசாரணை நடத்தி வருகின்றனர்.