அமைதியான இந்திய மக்கள் மீது பாய்ந்த படுபாதக எமர்ஜென்சியின் கறுப்பு தினம் இன்று!
1975ம் ஆண்டு எமர்ஜென்சியை திணித்து கடும் துயரத்திற்கு இந்திய மக்களை ஆளாக்கிய தினம் இன்று.
சென்னை: இந்திய வரலாற்றில் கருப்பு நாளாக கரைபடிந்துள்ள எமர்ஜென்சி பிரகடனம் இதே நாளில்தான் 42 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைக்கு வந்தது. இதனால் இந்திய வரலாற்றில் இந்திரா காந்திக்கு தீராத அவப் பெயர் வந்து சேர்ந்தது.
1975-ம் ஆண்டு இதே நாளில்தான் இந்தியாவில் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டது. 21 மாதங்கள் அமலில் இருந்த எமர்ஜென்சி 77ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் தேதி விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்திராகாந்தி அவசர அவசரமாக இந்தியாவிற்கு அவசர நிலையை பிரகடப்படுத்தியது ஏன்?
அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு
1971ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றியை ஏற்றுக் கொள்ளாத அவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ராஜ்நாராயண் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தேர்தலில் போட்டியிடத் தடை
அந்த வழக்கில் 1975ஆம் ஆண்டு ஜூன் 12ம் தேதியன்று இந்திராகாந்தி வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பு வெளியானது. அதோடு நிறுத்திக் கொள்ளாத நீதிமன்றம் அடுத்த 6 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிட இந்திராகாந்திக்கு தடையும் விதித்தது.
அவசரநிலை பிரகடனம்
அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று இந்திரா காந்தி பதவி விலக வேண்டும் என்று மூத்த தலைவரான ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் எதிர்ப்புக் குரல் எழுந்தது. இதனால் கடுப்பான இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடப்படுத்தினார்.
அதிர்ச்சி அலைகள்
இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, அவசர நிலையை பிரகடம் செய்தவர் அப்போதை ஜனாதிபதி பக்ருதீன் அலி முகமது. அதன் பிறகு இந்தியாவில் நடந்த கொடுமைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பத்திரிகையின் சுதந்திரம்
பத்திரிகை சுதந்திரத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டது. எமர்ஜென்சி பிரகடனம் செய்யப்பட்ட நள்ளிரவில் அனைத்து தினசரி பத்திரிகை அலுவலகங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அன்றிலிருந்து யாரும் நினைத்தை யாரும் எழுத முடியாது.
தலைவர்கள் சிறையில் அடைப்பு
இந்திய அளவில் இந்திராவை எதிர்த்த அனைவருக்கும் சிறை தயாராக காத்திருந்தது. இந்திரா காந்தியை எதிர்த்த ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராஜ்நாராயணன், சரண்சிங், ஆச்சார்ய கிருபாளினி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், வாஜ்பாய், அத்வானி என பல எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறையிலடைக்கப்பட்டனர்.
திமுக ஆட்சிக் கலைப்பு
தமிழகத்தில் அப்போது ஆட்சியில் இருந்த கட்சி திமுக. முதல்வராக ஆட்சி அரியணையில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்தார். இதனால் திமுக ஆட்சியை இழந்ததோடு, திமுகவினர் பலரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மு.க. ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, வைகோ, துரைமுருகன் என பல முக்கிய தலைவர் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
முடிவிற்கு வந்த அவசர நிலை
கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலர் தங்களை பெயர்களை துறந்து, தலைப்பெழுத்துக்களால் அழைக்கப்பட்டனர். இந்தக் கொடுமைகள் 21 மாதங்கள் வரை நீடித்தது. இந்தக் கொடூர செயலலில் இந்திராகாந்தியின் மகன் சஞ்சய் காந்திக்கு மிக முக்கிய பங்கிருந்தது. அதன் இறுதியில் 1977ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் படுமோசமான தோல்வியை இந்திராகாந்தி சந்தித்தார். இதனைத் தொடர்ந்த மார்ச் மாதம் எமர்ஜென்சி முடிவிற்கு வந்தது.