கோட்டைக்கு வருகிறார் ஓ.பி.எஸ்.. பரபர சூழலில் டிஜிபியுடன் தலைமைச் செயலர் அவசர ஆலோசனை
தமிழகத்தில் பரபரப்பான சூழலில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த அவசர ஆலோசனை சென்னை தலைமையகத்தில் நடைபெற்றது.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இருவருக்கும் இடையே கடுமையாக அதிகார சண்டை நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் டிஜிபி ராஜேந்திரனுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் அதிமுகவினரிடையே ஏற்பட்டுள்ள பிளவால் தமிழக போலீசார், ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோர் இடையே எப்படி செயலாற்றுவது என்பது குறித்து குழப்பம் காணப்படுகிறது. இதனால், தமிழக நிர்வாகப் பணிகள் அனைத்தும் ஸ்தம்பித்துள்ளது.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவசர ஆலோசனை ஈடுபட்டுள்ளார். ஆலோசனையில் காவல்துறை டிஜிபி ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பல்வேறு துறை அதிகாரிகளும் தற்போதுள்ள நிலை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.