மின்சார ரயில்களில் வீடு திரும்பும் அரக்கோணம்வாசிகளே உங்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி
சென்னை: சென்னை : சென்னை நகரிலும், புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய கொட்டிய கனமழையால் ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில், 26 மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தாம்பரம் - கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவையில் மாற்றமில்லை என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையில் தாழ்வான பகுதிகளில் ரயில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. காலை முதலே மின்சார ரயில்கள் பல மணிநேரம் தாமதமாக வந்த நிலையில் தற்போது அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது அரக்கோணம் சுற்றுவட்டார பயணிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அதே நேரத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் மின்சார ரயில்கள் வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளுக்கு செல்பவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
ரயில்கள் ரத்து
இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடா செல்லும் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் (எண். 12077), விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் ஜன் சதாப்தி (எண். 12078) மற்றும் பெங்களூர்-சென்னை சென்ட்ரல் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் (எண் 12640) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்ட்ரல் வராத ரயில்கள்
திருப்பதி-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் திருவள்ளூர்-சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலானது சென்ட்ரல்-திருவள்ளூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. விஜயவாடா-சென்ட்ரல் இடையே இயக்கப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில்கள் சில்லூருபேட்டை-சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாற்றுப் பாதையில் ரயில்கள் இயக்கம்
இதுதவிர சில ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகின்றன. பாட்னா-பெங்களூர் எக்ஸ்பிரஸ் (12296), சென்னை சென்ட்ரல் வராமல் கூடூர், ரேணிகுண்டா, மேல்பாக்கம் வழியாக திருப்பி விடப்படுகிறது. கவுகாத்தி -திருவனந்தபுரம் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (12516), கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர் வழியாக திருப்பி விடப்படுகிறது. திருவனந்தபுரம்-ஷாலிமார் எக்ஸ்பிரஸ் (22641), பெரம்பூர், வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை வழியாக (சென்ட்ரல் வராமல்) திருப்பி விடப்படுகிறது.
கும்மிடிப்பூண்டி எப்படி போறது?
அதேபோல சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னையில் இருந்து வீடு திரும்ப முடியாமல் பயணிகள் தவித்து வருகின்றனர். திருவொற்றியூரில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரயில் மட்டுமாவது இயக்க வேண்டும் என்று கோரிக்கை விட்டுள்ளனர்.
தண்ணீர் வடிய வேண்டும்
அதே நேரத்தில் வெள்ளநீர் வடிந்த பின்னரே சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து மின்சார ரயில்களை இயக்க முடியும் என்று ரயில் நிலைய அதிகாரி அறிவித்துள்ளதால் அலுவலகத்திற்கு சென்னை வந்தவர்கள் வீடு திரும்ப முடியாமல் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எந்தெந்த ரயில்கள் தாமதம்
சென்னை சென்ட்ரல் - மங்களூர் விரைவு ரயில் மாலை 5 மணிக்கு பதில் இரவு 9 மணிக்கு செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்ட்ரல் - திருவனந்தபுரம் விரைவு ரயில் இரவு 7.45-க்கு பதில் இரவு 8.45-க்கும், சென்ட்ரல் - டெல்லி ஜி.டி. எக்ஸ்பிரஸ் இரவு 7.15-க்கு பதில் இரவு 9.30-க்கு புறப்படும் என்றும், சென்னை - டெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் இரவு 10 மணிக்கு பதில் இரவு 11 மணிக்கு செல்லும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.