கெளரவக் கொலைகளை தடுக்க சட்டம் தேவை: ராமகோபாலன்
மதுரை: தமிழகத்தில் கவுரவக்கொலைகள் அதிகம் நடக்கின்றன. இந்த தீமையை எல்லோரும் சேர்ந்துதான் எதிர்க்க வேண்டும் என்று இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் கேட்டுக்கொண்டுள்ளார். அ.தி.மு.க. ஆட்சி வந்ததிலிருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தடுமாறுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்து முன்னணியின் மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இராம.கோபாலன், கூறியதாவது,
ஆக்ராவில் நூறு முஸ்லிம்கள் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி நடந்தவுடன், அதை பரபரப்பு செய்தியாக்கி ஊடகங்களும், மதசார்பற்ற கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், பா.ஜ.க. அரசு மதமாற்ற சட்டம் கொண்டுவரவும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றார்.
சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியலுக்காக இந்து மதத்திற்கு எதிராக துரோகம் செய்கிறார்கள். இதுபோல் சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயல்படும் அரசியல்கட்சிகளுக்கு இந்துக்கள் பாடம் கற்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. அ.தி.மு.க. ஆட்சி வந்ததிலிருந்து சட்டம் ஒழுங்கு ரொம்ப மோசமாகத்தான் உள்ளது.
மதுரையில் 8 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தும், காவல் துறையின் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக், தமிழக காவல் துறைக்கு தெரியாமல் கடலூரில் அரங்க கூட்டத்தில் கலந்து கொண்டு சென்றுள்ளார். இது பற்றி காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐ.எஸ்., லஸ்கர் இ தொய்பா போன்ற பயங்கரவாத இயக்கங்களில் பயிற்சி பெற்றவர்கள் தமிழகத்தில் நாச வேலைகள் செய்ய காத்திருக்கிறார்கள்.
இங்குள்ள பயங்கரவாதிகள் பெங்களூர் போன்ற வெளிமாநிலங்களுக்கு சென்று குண்டு வைக்குமளவுக்கு நாச வேலைகளில் வளர்ச்சி பெற்றுள்ளனர்.
சமீபத்தில், முத்துப்பேட்டையில் ஆளில்லா விமானம் மூலம் முஸ்லீம்கள் வேவு பார்த்த சம்பவமும் நடந்துள்ளது. இதையெல்லாம் தமிழக போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இதை வன்மையாக கண்டிருக்கிறோம்.
அதேபோல், கோட்சேக்கு சிலை வைக்கப்போவதாக அட்ரஸ் இல்லாத இயக்கமொன்று அறிவித்துள்ளது. இது விளம்பரத்திற்காகவும், பா.ஜ.க. அரசுக்கு கெட்ட பெயரை உண்டாக்கவும் செய்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். இயக்க கொள்கைப்படி சிலை வைப்பது நடைமுறையில் இல்லை. அதனால், இந்த அறிவிப்புக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கும் சம்பந்தமில்லை.