ரியல் எஸ்டேட் திருடர்களால் காணாமல் போன சென்னை ஏரிகள்- நகரை மூழ்கடித்த வெள்ளம்..!
சென்னை: சென்னை நகரமும், புறநகர்ப் பகுதிகளும் மழை நீர் மூழ்கிப் போக முக்கியக் காரணமே, ஏரிகள் மற்றும் ஏரிக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதே. இந்த ஆக்கிரமிப்பை அப்பாவி மக்களை விட மிக மிக அதிக அளவில் செய்த குற்றவாளிகள் ரியல் எஸ்டேட் களவாணிகளும், அவர்களுக்கு ஆதரவாக உள்ள அரசியல்வாதிகளும்தான்.
இரும்புக் கரம் கொண்டு இந்தக் கொடியவர்கள் அடக்கப்படாத வரை, அழிக்கப்படாத வரை சென்னையை எந்த கடவுளாலும் கூட காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.
எல்லா ரியல் எஸ்டேட்காரர்களும் மோசமானவர்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட பெரும்பாலானவர்கள் இப்படி ஏரிகளையும், கால்வாய்களையும் ஆக்கிரமிப்பு செய்பவர்களாகவே உள்ளனர் என்பதுதான் உண்மை.
செம்பரம்பாககம் டூ போரூர்
உதாரணத்திற்கு செம்பரம்பாக்கம் ஏரி. இந்த ஏரி நிரம்பியதால் சென்னையின் புறநகர்கள் பலவும் மூழ்கிப் போயின. சென்னை நகருக்குள்ளும் அடையாறு ஆற்றையொட்டி பெரும் பாதிப்பு ஏற்பட்டது. காரணம், இந்த ஏரியின் தண்ணீர் போய்ச் சேர வேண்டிய கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதே.
கால்வாய் ஆக்கிரமிப்பு
செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்தால் அதிலிருந்து வரும் தண்ணீர் நேராக போரூர் ஏரிக்குப் போக வேண்டும். ஆனால் அதற்கான கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் தூர் வாரப்படவும் இல்லை.
பாதை மாறியதால்
இப்படி கால்வாய் சரியாக இல்லாமல் போனதால், தயார் நிலையில் இல்லாமல் போனதால் அதில் போக வேண்டிய தண்ணீர் சாலைகளிலும், வீடுகளுக்குள்ளும் புகுந்து வெள்ளக்காடாக்கி விட்டது.
வீணாக கடலுக்குப் போன தண்ணீர்
இப்படி ஏரிக் கால்வாய் வழியாக ஏரிகளுக்குப் போகாமல் ஊர்களுக்குள் புகுந்த தண்ணீர் வீணாக கடலில்தான் போய்க் கலந்தது. அதாவது சென்னைக்குக் கிடைத்த மழை நீரில் பெருமளவு வீணாகி விட்டது என்பதே வருத்தத்திற்குரிய செய்தியாகும்.
பள்ளிக்கரணையிலும் இதே கதைதான்
இதே கதைதான் பள்ளிக்கரணையிலும் நடந்தது. அங்குள்ள ஏரி தூர்வாரப்படவில்லை. அங்குள்ள சதுப்பு நிலம் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. வீட்டு மனைகளாக்கி விட்டனர். மனித ஆக்கிரமிப்பு மகாக் கொடூரமாக நடந்து வருகிறது. இதுவே அப்பகுதி வெள்ளக்காடாக காரணம்.
கால்வாய்கள் கபளீகரம்
ஏரிகளை விட மிக மிக முக்கியமானது அவற்றின் கால்வாய்கள்தான். காரணம், ஏரி நிரம்பும்போது அதன் உபரி நீர் இந்த கால்வாய்கள் மூலமாகத்தான் அடுத்தடுத்த ஏரிகளுக்கு போக முடியும். அவை கிட்டத்தட்ட முழு அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அக்கிரமம் சென்னையில் நடந்துள்ளதால்தான் சென்னை இன்று நாறிப் போய் விட்டது.
யார் காரணம்?
இந்த ஏரி சீரழிவுக்கும் கால்வாய் அழிவுக்கும் சாதாரண மக்கள் காரணம் அல்ல. மாறாக ரியல் எஸ்டேட் முதலாளிகளும், சில கார்ப்பரேட் நிறுவனங்களும், இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அரசியல் கட்சிகளும், சில காவல்துறையினரும், இவர்களுக்கு எப்போதுமே ஆதரவாக இருந்து வரும் ரவுடிக் கூட்டமுமே முக்கியக் காரணம்.
திமுக, அதிமுக பாரபட்சம் இல்லை
இப்படிப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு எப்போதுமே அரசியல்வாதிகள் ஆதரவு தரத் தவறுவதில்லை. அது திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி,அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி பாரபட்சமே இல்லாமல் ஆதரவு தருவார்கள். எந்த ஆட்சியிலாவது இத்தனை ஏரிகளையும், கால்வாய்களையும், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுள்ளோம் என்று கூற முடிந்திருக்கிறதா?
இத்தனை ஏரிகளை அழித்துள்ள படுபாவிகள்
தமிழகத்தைப பொறுத்தவரை 32,202 ஏரிகள் இருப்பதாக பொதுப்பணித்துறை கணக்கு கூறுகிறது. ஆனால் உண்மையில் இருப்பது வெறும் 18,000 ஏரிகள்தானாம். மற்ற அனைத்துமே செத்துப் போய் விட்டன.. அல்லது மூச்சுத் திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டு விட்டன.
நிற்க வைத்து சுடலாம்.. தப்பே இல்லை
மக்களின் உயிரோடும்,இயற்கையைத் துண்டாடி சுயநலமாக நடந்து கொள்ளும் இதுபோன்றோரை நிற்க வைத்து சுடலாம்... தப்பே இல்லை என்பதுதான் அப்பாவி மக்களின் ஏகோபித்த கருத்தாக உள்ளது.
வேதனைக்குரிய டாஸ்மாக் அரசு
இந்த மழைச் சேதம் குறித்து பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை மிகச் சரியாக ஒன்றைக் கூறியுள்ளார். அவர் கூறுகையில், டாஸ்மாக் விற்பனைக்கு, தொலைநோக்குப் பார்வையுடன் இலக்கு நிர்ணயித்து முன்னேற்பாடுகள் செய்து, அந்தத் 'தண்ணீரு'க்கு இலக்கு வைத்த அரசு, மழைத் தண்ணீர்ப் பிரச்னைக்கான தீர்வை முன்னரே கணிக்க மறந்தது, வேதனை அளிக்கக்கூடியது..!
செத்துப் போக வேண்டும்.. மானஸ்தராக இருந்தால்!