பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு: விவசாயிகளுக்கு தொல்லையாய் மாறிய நடிகர் மாதவன்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாசன வாய்க்கால் மற்றும் புறம்போக்கு நிலங்களை நடிகர் மாதவன் ஆக்கிரமித்துள்ள நடிகர் மாதவன் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன்.
கொடைக்கானல் மற்றும் அதனையொட்டியுள்ள இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் திரைப்பட மற்றும் அரசியல் பிரபலங்கள் நிலங்கள் வாங்கிப் போட்டுள்ளனர்.
விலாங்கோம்பை அடுத்துள்ள தேக்கன் தோட்டம் பகுதியில் டிடிஎல் பாசன வாய்க்கால் உள்ளது. கொடைக்கானல் மலையிலிருந்து பழனி பகுதியில் உள்ள கண்மாய்களுக்குச் செல்லும் இந்த வாய்க்கால் மூலம் தேக்கன் தோட்டம் பகுதியில் 50 ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
இந்நிலையில், தேக்கன் தோட்டம் பகுதியில் 7 ஏக்கர் நிலம் வாங்கியுள்ள திரைப்பட நடிகர் மாதன், 50 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் வரத்து கால்வாயை ஆக்கிரமித்ததுடன், மின்வேலியும் அமைத்துள்ளார். இதனால் விவசாயிகளின் பாசன உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் அந்தப் பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு இரண்டு அரசு அதிகாரிகளே உடந்தையாக இருப்பதுதான் கொடுமை.
அந்தப் பகுதியில் உள்ள மற்ற விவசாயிகளின் நிலங்களையும் கணிசமான விலைக்கு வாங்கிக் கொள்வதாக மாதவன் கூறியதைத் தொடர்ந்து, இந்த அரசு அதிகாரிகளே புரோக்கர்களாக செயல்பட்டு நிலங்களை வாங்கிக் கொடுக்கும் வேலையில் இறங்கியுள்ளார்களாம்.
இது குறித்து, வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.