கொடைக்கானலில் பரபரப்பு.. நீதிமன்ற உத்தரவுப்படி சீல் வைக்கப்பட்ட காட்டேஜ்கள் அனுமதியின்றி திறப்பு
கொடைக்கானல்: கொடைக்கானலில் சீல் வைக்கப்பட்டுள்ள ஒரு சில கட்டிடங்கள், அனுமதியின்றி திறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்பேரில், அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைத்தது கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம்.
விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட காட்டேஜ்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை நீதிமன்ற உத்தரவின்படி பூட்டி சீல் வைக்கப்பட்டன. இதுவரை 278 காட்டேஜ்கள், தங்கும் விடுதிகளுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.
தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொடைக்கானலில் பல கட்டிடங்கள் வைக்கப்பட்ட சீலை அகற்றியும், மாற்று வழி அமைத்தும் கட்டிடங்களை வியாபாரத்திற்காக பயன்படுத்தியும் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விதிகளை மீறி திறக்கப்படும் காட்டேஜ்களில் 4 பேர் அடங்கிய ஒரு குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் வரை வாடகை வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இது குறித்து பேசிய ஹோட்டல் அசோசியேசனை சேர்ந்த கட்டிட உரிமையாளர் ஒருவர், ஐகோர்ட்டு உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்த கட்டிடங்கள் எல்லாம், தற்போது வைக்கப்பட்ட சீலை அகற்றி விதிகளை மீறி செயல்பட்டு வருகின்றன.
நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் கட்டிடங்கள் எதுவும் தங்களுடைய கூட்டமைப்பில் உள்ளவர்களுடையது இல்லை. உரிய அனுமதியின்றி வீடுகளை காட்டேஜ்களாக நடத்தும் சிலரே இத்தகைய அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர் என கூறினார். ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டு மொத்த வியாபாரிகளும் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
பெள்ளாச்சி ரயில் நிலையத்தில் போலீசார் திடீர் சோதனை... வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் பீதி
இதனிடையே ஏற்கெனவே பூட்டப்பட்ட தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள், நகராட்சி அதிகாரிகளிடம் சென்று பூட்டி சீல் வைக்கப்பட்ட காட்டேஜ்கள் எவ்வாறு செயல்பட்டு வருகிறது என வினவினர். தங்களுடைய காட்டேஜ்களும் செயல்பட உதவி செய்ய வேண்டுமெனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே சீல் வைக்கப்பட்ட ஒரு சில கட்டிடங்கள் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டாலும், பெரும்பாலான கட்டிடங்கள் சீலை அகற்றாமல் அப்படியே தான் உள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி சிலர் செய்யும் செயல்கள் தங்களையும் பாதித்து விடுமோ என்ற அச்சத்தில் பல கட்டிட உரிமையாளர்கள் உள்ளனர்.