நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: ஓபிஎஸ் உறுதி
சென்னை: பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்தே நீர் நிலை ஆக்கிரமிப்பு நடைபெற்று வருவதாகவும், கணக்கெடுப்பு பணி முடிவடைந்ததும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாவது நாளான நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய தேமுதிக உறுப்பினர் பார்த்தசாரதி, ‘நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ‘நீர் நிலை ஆக்கிரமிப்பு என்பது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்து நடைபெற்றுள்ளது. தற்போது நீர் நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அந்தப் பணி முடிவடைந்ததும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' எனப் பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் வைத்திலிங்கம் பேசுகையில், ‘அடையாற்றுப் பகுதியில் இருந்தோருக்கு வேறு இடங்களில் வீடுகள் கொடுத்தால் உங்கள் (தேமுதிக) தலைவர் அதே இடத்தில் அவர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்கிறார். ஆனால், இங்கு தேமுதிக உறுப்பினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்கிறார். இதில் எது உங்களின் உண்மையான நிலைப்பாடு?' என கேள்வி எழுப்பினார்.