மணியார்டரும்… அப்பாவின் மனசும்….
அப்பா பணம் வேணும்பா... காலேஜ்ல செமஸ்டர் பீஸ் கட்டணும் என்று தொண்ணூறுகளில் கல்லூரியில் படிக்கும் போது 15 பைசா போஸ்ட் கார்ட்டில் எழுதினால் ஓரிரு நாளில் டாண் என்று போஸ்ட் மேன் பணத்தை கொண்டு வந்து கொடுப்பார்.
அந்த மணியார்டர் பாரத்தின் கீழே ஒரே ஒரு வரி எழுதியிருக்கும்... 'அன்பு மகளுக்கு... நன்றாக படித்து பரிட்சை எழுது... மற்றவை நேரில். இப்படிக்கு அன்பு அப்பா'. இந்த ஒரு வரி அப்பாவே நேரில் வந்து பணத்தை கொண்டு வந்து கொடுத்தது போல இருக்கும்.
இன்றைக்கு அதே அப்பாவிற்கு மகள்களும், மகன்களும் அக்கவுண்டில் பணத்தை டிரான்ஸ்பர் செய்து விடுவதால் மணியார்டர் முறைக்கு மூடுவிழா காணப்போகிறார்களாம்.
சரிதான். மணியார்டர் கொடுக்கும் போஸ்ட்மேனுக்கு அந்த பணத்தை பட்டுவாடா செய்யும் போதே கையில் லம்ப் ஆக ஒரு கமிஷன் கிடைக்கும். ஒருநாளைக்கு பத்து மணியார்டர் டெலிவரி செய்தால் போது வீட்டிற்குப் போகும் போது 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை கையில் புரளும். இப்போது அதற்கும் வேட்டு வைக்கப்போகிறதே மத்திய அரசு என்று அங்கலாய்க்கிறார்கள் போஸ்ட்மேன்கள்.
பணத்திற்கு கமிஷன்
அதுவும் அரசு ஓய்வூதியம் வந்த போது போஸ்ட்மேன்கள் காட்டில் மழைதான்... 1000 ரூபாய்க்கு 50 வீதம் கமிஷன் கையில் கிடைப்பதன் மூலம் நாளொன்றுக்கு 20 பேருக்கு பணம் டெலிவரி கொடுத்தால் போஸ்ட்மேன்களுக்கு ரூ.1000 ஒருநாளைக்கு கிடைக்கும். மணியார்டருக்கு போஸ்ட்மேன்களுக்கு பணம் கொடுப்பது அவரவர்களின் சொந்த விருப்பம்தான் என்றாலும் அதை யாரும் கொடுக்காமல் இருக்கமாட்டார்கள்.
போஸ்ட்மேன்கள் கலக்கம்
எனவே கையில் கிடைக்கும் பணத்திற்கும் ஆப்பு வைப்பது போல ஓய்வூதியங்கள் அனைத்து வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. இப்போது மொத்தமாக மணியார்டர் என்ற முறைக்கே மூடுவிழா காணப்போகிறது மத்திய அரசு. இதுதான் போஸ்ட்மேன்கள் வயிற்றில் புளியை கரைத்து வருகிறது.
மூடுவிழா ஏன்?
உலகிலேயே மணியார்டர் நடைமுறை 1792ம் ஆண்டில் இங்கிலாந்தில் தொடங்கியது. விரைவு மணியார்டர், மின்னணு மணியார்டர் முறைகளில் வங்கிக் கணக்குகளில் பணப்பட்டுவாடா செய்யும் முறை பிரபலமாகி விட்டதால், வீடு தேடிச் சென்று நேரில் தரும் சாதாரண மணியார்டர் சேவையை நிறுத்திக் கொள்ளவும் அஞ்சல் துறை பரிசீலித்து வருகிறது.
போஸ்ட் கார்டு
நான் இங்கே நல்லா இருக்கேன்... நீங்க அங்க சவுக்கியமா? அங்கே மழையா? இங்க மழையக்காணோம் என்று நுணுக்கி நுணுக்கி எழுதுவோம் போஸ்ட் கார்ட்டில். இப்போது செல்போன்... ஈ மெயில், இன்டர்நெட் என்று வந்ததை அடுத்து தபால் எழுதும் முறையே மறைந்துவிட்டது. பள்ளிகளில் கூட விடுமுறை கடிதம் எழுத மட்டுமே பழக்கப்படுத்துகின்றனர்.
நஷ்டத்தில் கார்டு, கவர்
தபால் கார்டு மீது 7 ரூபாயும், இன்லேண்ட் கவர் மீது 5 ரூபாயும் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. அஞ்சல் துறை சார்பில் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
5,473 கோடி இழப்பு
தபால் கார்டு தயாரிக்க 7 ரூபாய் 53 காசு செலவாகும் நிலையில், அது 50 காசுக்கு விற்கப்படுவதாகவும், 7 ரூபாய் 48 காசு செலவாகும் இன்லேண்ட் கவர் இரண்டரை ரூபாய்க்கு விற்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் 2013-14ம் நிதி ஆண்டில் அஞ்சல் துறைக்கு 5 ஆயிரத்து 473 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தியைத் தொடர்ந்து...
நூற்றாண்டு பழமையான தந்திக்கு மூடுவிழா காணப்பட்டது. தொடர்ந்து மணியார்டர் முறையும் நிறுத்தப்பட உள்ளது. நஷ்டத்தைக் காரணம் காட்டி விரைவில் போஸ்ட் கார்டு, இன்லாண்ட் லெட்டரையும் நிறுத்திவிடுவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது. வருங்கால தலைமுறையினர் தபால்நிலையங்களையும், தபால்காரர்களையும் பாடப்புத்தகங்களில் மட்டுமே படிக்கவேண்டிய நிலை ஏற்படும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.