மருத்துவப்படிப்பில் ஓ.பி.சி ஒதுக்கீடு ரத்து : சமூகநீதிக்கு சவக்குழி வெட்டிய மோடி அரசு - வேல்முருகன்
மருத்துவப்படிப்பில் ஓ.பி.சி ஒதுக்கீட்டை ரத்து செய்து சமூகநீதிக்கு மோடி அரசு சவக்குழி வெட்டி இருப்பதாக வேல்முருகன் விமர்சித்துள்ளார்.
சென்னை : மருத்துவப்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை மோடியின் பாஜக அரசு செய்திருப்பது பழிவாங்கும் நடவடிக்கை என்று வேல்முருகன் விமர்சித்துள்ளார்.
மருத்துவப்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு (ஓ.பி.சி) வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பழிவாங்கும் செயலாக விமர்சித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
ஓபிசி இடங்கள் ரத்து
மக்களாட்சி என்பது மக்களின் விருப்படி ஜனநாயக ஆட்சி நடத்துவதாகும். ஆனால் மோடி, மக்களின் விருப்பத்துக்கு மாறாக தன் விருப்பத்தையே மக்கள் மீது திணித்து ஆட்சி நடத்துகிறார். எனவே மோடியின் ஆட்சி, மக்களாட்சி அல்ல; தான்தோன்றித்தனமான ஜனநாயக ஆட்சி அல்லாத சர்வாதிகார ஆட்சி! அதனால்தான் நாட்டின் பெரும்பான்மை மக்களான இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் மருத்துவப் பட்டமேற்படிப்பு இட ஒதுக்கீட்டை ரத்து செய்திருக்கிறார்.
மருத்துவப்படிப்பு
மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி 2006ம் ஆண்டில் இயற்றப்பட்ட 'மத்தியக் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான இட ஒதுக்கீடு சட்டம்', ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்கள் யாவற்றிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி செய்கிறது.
மருத்துவப் படிப்பில் ஒன்றிய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும், மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இந்த இட ஒதுக்கீட்டை உறுதி செய்கிறது சட்டம்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
ஆனால் மருத்துவப் பட்டமேற்படிப்பில் ஒன்றியத் தொகுப்புக்கு மாநிலங்கள் அனுப்பும் 50 விழுக்காடு இடங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை நடப்பாண்டில் ரத்து செய்துவிட்டார் மோடி. இந்த 50 விழுக்காடு இடங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 % , பட்டியலினத்தவருக்கு 15% விழுக்காடு, பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடு என மொத்தம் 49.5 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீட்டிற்கானதாகும். ஆனால் பட்டியலினத்தவருக்கும் பழங்குடியினருக்குமான இடங்களை மறுக்காமல், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடங்களை மட்டும் ரத்து செய்திருக்கிறார் மோடி.
சமூகநீதிக்கு சவக்குழி
இதில் மோடியின் பச்சை நயவஞ்சகம் ஒளிந்திருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்களை பழிவாங்கியதல்லாமல், பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு இந்த மூன்று சாராருக்கிடையிலும் பிளவை ஏற்படுத்துவதே மோடியின் கெட்ட எண்ணமாகும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததால் அவர்கள் சுமார் 2,500 மாணவர்கள் பாதிக்கப்படுவர். அவர்களுக்குரிய இந்த 2,500 இடங்களைப் பறித்து, அவற்றை முன்னேறிய வகுப்பாருக்கே வழங்கி சமூக நீதியை சவக்குழிக்கு அனுப்பப்பார்க்கிறார் மோடி.
வாபஸ் பெறவேண்டும்
இதைப் பெரும்பான்மை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். தமிழக வாழ்வுரிமைக் கட்சி இதை வன்மையாகக் கண்டிக்கிறது. இதற்கு எதிராக மாணவர்கள் மற்றும் பெரும்பான்மை மக்கள் போராட்டத்தில் இறங்குவதற்கு முன், பாரபட்சமான தன் பழிவாங்கல் முடிவை மோடி வாபஸ் பெற்று, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீட்டை முன்பிருந்தபடி நீடிக்கச்செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.