ஆவின் பால் சுத்தமானது… ஆனா ஏன் கெட்டுப்போகுது தெரியுமா? அரசு விளக்கம்
ஆவின் நிறுவனம் பாலின் தரம் குன்றாமல் இருப்பதற்காக, எல்லா நிலைகளிலும் தொடர்ந்து குளிர் நிலையிலேயே பாதுகாத்து, நுகர்வோர்களுக்கு அளிப்பதன் காரணமாக பால் கெடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒரு சில விற்பனை நிலையங்களில் பாலை திறந்த நிலையில் விற்பனை செய்யும்போது சுற்றுப்புற வெப்ப நிலையின் காரணமாக பால் கெட்டுவிடும் சூழ்நிலை ஏற்படுகிறது எனவும் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
ஆவின் நிறுவனம் நுகர்வோர் நலனில் அக்கறை கொண்டு தரமான பாலை விநியோகம் செய்து வருகிறது. பால் உற்பத்தியிலிருந்து பால் விநியோகம் செய்யும் வரை எல்லா நிலைகளிலும் தரத்தை உறுதி செய்து தரமான பாலை கொள்முதல் செய்து நுகர்வோர்களுக்கு அளித்து வருகிறது.
கிராம அளவில் பால் உற்பத்தியாளர்களுக்கு தூய பால் உற்பத்தி முறைகள் (Clean Milk Production) பயிற்றுவிக்கப்படுவதால் பால் உற்பத்தியாளர்கள் ஆரம்ப நிலையிலையே தரமான பாலை உற்பத்தி செய்து சங்கங்களுக்கு அளிக்கிறார்கள். பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் அளிக்கும் பாலின் தரம் பரிசோதிக்கப்பட்டு தரமான பால் மட்டுமே பெற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும், பாலின் தரம் குன்றாமல் இருக்கும் வண்ணம் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் மொத்த பால் குளிர்விப்பான்கள் அமைக்கப்பட்டு பால் வாங்கிய உடன் குளிர் நிலையில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. இதனால் கறந்த பாலின் தரம் குன்றாமல் ஆரம்ப நிலையிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
இதற்கென தமிழகத்தில் 276 மொத்த பால் குளிர்விப்பான்கள் மற்றும் 35 பால் குளிரூட்டும் நிலையங்கள் நிறுவப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு சங்க அளவில் பெறப்பட்ட பால் அருகாமையில் உள்ள மாவட்ட பால்பண்ணை அல்லது குளிரூட்டும் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு அதன் தரம் மீண்டும் பரிசோதிக்கப்பட்டு உள்ளூர் தேவைக்காக பால்பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு மாவட்ட அளவில் விற்பனை செய்கிறது.
மேலும், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், சேலம், ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து தரமான பால் வெப்பம் தடைசெய்யப்பட்ட டேங்கர்களில் சென்னைக்கு தருவிக்கப்படுகிறது. இயத பால் டேங்கர்களில் ரகசிய குறியீட்டு எண் பொருத்தப்பட்டு (Metal Seal) சென்னைக்கு பாதுகாப்பாக குளிர்பதன நிலையில் தரம் குறையாமல் அனுப்பப்படுகிறது. ஆவின் பால்பண்ணையில் பால் பெறப்படுவதிலிருந்து நுகர்வோர்களுக்கு பால்பாக்கெட்டுகளை விற்பனை செய்வது வரை சுமார் 19 வகையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே நுகர்வோர்களை சென்றடைகிறது.
ஆவின் நிறுவனம் பாலின் தரம் குன்றாமல் இருப்பதற்காக, எல்லா நிலைகளிலும் தொடர்ந்து குளிர் நிலையிலேயே பாதுகாத்து, நுகர்வோர்களுக்கு அளிப்பதன் காரணமாக பால் கெடுவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால், ஒரு சில விற்பனை நிலையங்களில் பாலை திறந்த நிலையில் விற்பனை செய்யும்போது சுற்றுப்புற வெப்ப நிலையின் காரணமாக பால் கெட்டுவிடும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, பாலின் குளிர் தன்மை இழக்காமல் இருக்க குளிர்பதன பெட்டிகளில் பாலை வைத்து விற்பனை செய்யப்படுவது அவசியமாகிறது.
ஆவின் நிறுவனம் தமிழகத்தில் 21.00 லட்சம் லிட்டர் பாலை விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆவின் நிறுவனம் 2010-11ம் ஆண்டுகளில் சராசரி பால் கொள்முதல் நாளொன்றுக்கு 20.67 லட்சம் லிட்டராக இருந்தது. தற்பொழுது பால் கொள்முதல் நாளொன்றுக்கு 30.70 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.
ஆவின் பால் கையாளும் திறன் 2010-11 ம் ஆண்டில் நாளொன்றுக்கு 24 லட்சம் லிட்டராக இருந்தது. பால் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பால் வளத்துறையின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்காக கடந்த நான்கு ஆண்டுகளில் ரூபாய் 409.94 கோடி என்ற அளவில் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
தற்பொழுது பால் கையாளும் திறன் நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் என்ற அளவை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்தின் 5.00 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் 17 இலட்சம் நுகர்வோர்கள் பயன் அடைகிறார்கள்.
மேலும், எதிர்கால தேவையை கருத்தில்கொண்டு வரும் மார்ச் 2016ல் ஆவின் பால் கையாளும் திறனை சராசரியாக நாளொன்றுக்கு கூடுதலாக 8 லட்சம் லிட்டர் அதிகரிக்கும் வகையில், மதுரை பால் பண்ணையின் பால் கையாளும் திறன் நாளொன்றுக்கு 3லிருந்து 5 லட்சம் லிட்டராகவும், கோயம்பத்தூர் பால்பண்ணையின் பால் கையாளும் திறன் நாளொன்றுக்கு 2லிருந்து 5 லட்சம் லிட்டராகவும், பெரம்பலூரில் 1 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட புதிய பால்பண்ணை அமைப்பதற்கும், சென்னை பெருநகர பால்பண்ணைகளின் தற்போதைய கையாளும் திறன் 11.50 லட்சம் லிட்டரிலிருந்து 13.50 லட்சம் லிட்டராக உயர்த்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன'' எனக் கூறப்பட்டுள்ளது.