கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் ரூ.143 கோடி வங்கி டெபாசிட் முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி
கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் 143 கோடி ரூபாய் வங்கி டெபாசிட் முடக்கப்பட்டுள்ளது.
சென்னை:கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் 143 கோடி ரூபாய் வங்கி டெபாசிட் முடக்கப்பட்டுள்ளது. 824 கோடி ரூபாய் வங்கிக்கடன் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
சென்னை உட்பட பல இடங்களில் கனிஷ்க் நகைக்கடை உள்ளது. இந்த நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டு பெரிய நகைக்கடைகளுக்கு நகைகளை சப்ளை செய்து வந்தது.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் 14 வங்கிகளில் ரூ.824 கோடி கடன் வாங்கிக்கொண்டு திருப்பி செலுத்தாமல் ஏமாற்றிவிட்டதாக சி.பி.ஐ.க்கு, சென்னை, பாரத ஸ்டேட் வங்கி, பொதுமேலாளர் புகார் அளித்தார்.
ரூ.824 கோடி கடன்
முதலில் பாரத ஸ்டேட் வங்கியில் வங்கிக்கணக்கை தொடங்கி, இந்த வங்கியில் இவர்கள் பெற்ற கடனை வருமானமாக கொண்டு 14 வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். இதுபோல் ரூ.824 கோடி கடன் பெற்றனர்.
எந்த பதிலும் இல்லை
இந்த கடனுக்கான வட்டித் தொகையானது சுமார் ரூ.160 கோடியாகும். இவர்கள் பெற்ற கடனுக்காக வங்கி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை.
சிபிஐ, அமலாக்கத்துறை
இதையடுத்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின், அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக சி.பி.ஐ.யும் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
சொத்து முடக்கம்
அண்மையில் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் தாலுக்காவில் உள்ள நடராஜபுரம் மற்றும் புக்காத்துறை கிராமங்களில் கனிஷ்க் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.48 கோடி மதிப்பிலான சொத்தை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்தது.
ரூ.143 கோடி டெபாசிட் முடக்கம்
இந்நிலையில் கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் ரூ.143 கோடி வங்கி டெபாசிட் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளது. 3000 கிலோ தங்கம் இருப்பில் உள்ளதாக போலி ஆவணம் தயாரித்து பூபேஷ் குமார் ஜெயின் மோசடி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.