சேகர் ரெட்டிக்கு சொந்தமான மேலும் 50 கிலோ தங்கம் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
சேகர் ரெட்டிக்கு சொந்தமான மேலும் 50 கிலோ தங்கம் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை
சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிக்கியுள்ள சேகர் ரெட்டிக்கு சொந்தமான ரூ. 14 கோடி மதிப்பிலான 50 கிலோ தங்கம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிக்கியுள்ள சேகர் ரெட்டிக்கு சொந்தமான ரூ. 68 கோடி மதிப்பிலான சொத்துகள் இதுவரை முடக்கப்பட்டுள்ளன..
கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் போயஸ் கார்டன் லாபியில் நெருக்கமான சேகர் ரெட்டி தமிழ்நாட்டில் பல இடங்களில் மணல் குவாரியை குத்தகைக்கு எடுத்தார். இதன் மூலம் கோடி கோடியாக கொட்டியது.
நவம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு கறுப்பு பணம், கள்ளப்பணத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
சென்னையில் நடைபெற்ற சோதனையில், தொழிலதிபர் சேகர்ரெட்டியின் வீட்டில் இருந்து 147 கோடி ரூபாய் பணமும், 178 கிலோ தங்கமும் பறிமுதல்செய்யப்பட்டது. அதில், 10 கோடி ரூபாய்க்கும் மேல் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளும் பிடிபட்டன
சட்டவிரோதமாக 34 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி வைத்திருந்ததாக போயஸ் இல்லத்திற்கு நெருக்கமானவராக அறியப்படும், தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகளான பிரேம்குமார், சீனிவாசலு, திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சிபிஐ கைதுசெய்தது. மே 12ம் தேதி சென்னை ஹைகோர்ட் இவர்களுக்கு ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் கடந்த மே மாதம் சேகர் ரெட்டிக்கு சொந்தமான 30 கிலோ தங்கத்தை அமலாக்கத்துறை முடக்கியது. தற்போது மேலும் 50 கிலோ தங்கம் முடக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.14 கோடியாகும். சேகர் ரெட்டிக்கு சொந்தமான ரூ. 68 கோடி மதிப்பிலான சொத்துகள் இதுவரை முடக்கப்பட்டுள்ளன.