ரூ.90 கோடி வங்கி மோசடி.. தமிழகத்தின் 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு
சென்னை: ரூ. 90 கோடி வங்கிக் கடன் மோசடி தொடர்பாக தமிழகத்தில் 9 இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர்.
கோவை, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இந்துமதி ரிபைனரி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் நிர்வாகிகள் செண்பகன் உள்ளிட்டோரது வீடுகள் மற்றும் வணிக வளாகங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்துமதி ரிபைனரி பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம், போலி ஆவணங்களை பாரத ஸ்டேட் வங்கியில் அளித்து ரூ. 87.36 கோடி அளவுக்கு கடன் பெற்றுள்ளது. போலி ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் போதுமான தொகை இல்லை. இதனால் இந்துமதி ரிபைனரி வாங்கிய மொத்த கடனும் எஸ்பிஐ வங்கி மீது சுமையாக மாறியுள்ளது. சுமார் 90 கோடி ரூபாய் அளவுக்கு எஸ்பிஐ வங்கிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எஸ்பிஐ வங்கி சிபிஐயிடம் புகார் அளித்திருந்தது.
இந்த வழக்கு விவகாரத்தில் சிபிஐ விசாரித்து முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகை சமர்ப்பித்துள்ளது. அந்த அடிப்படையில் செண்பகன் மற்றும் நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.
விசாரணையின்போது, நிறுவன பார்ட்னர்களும், இயக்குநர்களும், பரிவர்த்தனை விவரங்களை வழங்கவில்லை என்றும், இதனால், ரெய்டு நடத்தப்பட்டது என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.