அமைச்சரும், அதிகாரிகளும் டார்ச்சர் கொடுத்தது உண்மை… முத்துக்குமாரசாமி மனைவியின் பகீர் வாக்குமூலம்
நெல்லை: அமைச்சர் மற்றும் நெல்லை அதிமுக பிரமுகர்களின் தொடர் மிரட்டல் காரணமாகவே தனது கணவர் தற்கொலை கொண்டதாக வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமியின் மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நெல்லை வேளாண்மைத்துறையில் அதிகாரியாக பணியாற்றிய முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது
வேளாண்துறையில் காலியாக இருந்த 7 டிரைவர் பணி நியமனம் தொடர்பாக ரூ.21 லட்சம் கேட்டு டார்ச்சர் செய்ததால் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது.
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை
இந்த வழக்கு தொடர்பாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் பூவையா, நெல்லையை சேர்ந்த சில அ.தி.மு.க. பிரமுகர்கள், வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் முத்துக்குமாரசாமியின் மனைவி, 2 மகன்கள் உள்ளிட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
ரகசிய வாக்குமூலம்
அனைவரிடமும் ரகசிய வாக்குமூலம் வாங்க நெல்லை நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுமதி வாங்கினர். அதன்படி முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் பூவையா கடந்த 23 மற்றும் 24ஆம்தேதி ஆகிய இரு தினங்கள் சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதர கண்ணன் முன்னிலையில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
பூவையாவின் வாக்குமூலம்
டிரைவர் பணிநியமனம் தொடர்பாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறியதன் பேரில் முத்துக்குமாரசாமியிடம் பேசியதாகவும், 7 டிரைவர்கள் பணி நியமனம் தொடர்பான பணத்தை உள்ளூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மூலம் வசூல் செய்ய சொன்னதாகவும் நீதிமன்றத்தில் பூவையா தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மிரட்டவில்லை
மேலும் தான் முத்துக்குமாரசாமியை மிரட்டவில்லை என்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சொன்ன தகவலை அவரிடம் தெரிவித்ததாகவும் பூவையா கூறியுள்ளார். அதற்கு முத்துக்குமாரசாமி, ‘ஏற்கனவே கலெக்டர் உத்தரவுப்படி 7 டிரைவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டிபடி நியமிக்கப்பட்டு விட்டனர். எனவே, பணம் கொடுக்க முடியாது' என்று கூறினார். இதை அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் கூறியபோது அவர் கடும் கோபம் அடைந்தார்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி
கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சிக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்றபோது அங்கிருந்து அவரே தொலைபேசியில் முத்துக்குமாரசாமியை தொடர்பு கொண்டு பேசியதாகவும், கடந்த பிப்ரவரி 13, 14 ஆகிய தேதிகளில் சென்னையில் நடந்த மீட்டிங்கிற்கு வந்த முத்துக்குமாரசாமியிடம் புதிதாக நியமிக்கப்பட்ட டிரைவர்களிடம் பணத்தை வசூல் செய்து தருமாறும் தெரிவித்தோம். அதற்கும் அவர் மறுத்துவிட்டார்.
பணம் தராவிட்டால் சஸ்பெண்ட்
ஓய்வு பெறும் நாளில் எந்த பணப்பயனும் பெறமுடியாமல் செய்து விடுவோம், பணம் தராவிட்டால் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளாவீர்கள் என்று கூறியதால், அவரது பி.எப். பணம் ரூ.6 லட்சத்தை எடுத்து கொடுக்க முன்வந்தார். இதுதொடர்பாக நெல்லை அதிமுக பிரமுகர்கள் சிலரும் அவரை மிரட்டியதாக அவர்களின் பெயரை குறிப்பிட்டு, பூவையா வாக்குமுலத்தில் தெரிவித்திருப்பதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், இந்த விவகாரத்தில் உள்ளூர் அதிமுகவினருக்கு தொடர்பு இருப்பது அம்பலமாகி உள்ளது. இதனால் அவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
உள்ளூர் பிரமுகர்களுக்கு சிக்கல்
பூவையாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை நடத்த இருப்பதாகவும், இதில் தொடர்புடைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் தெரிகிறது. இதற்கிடையில் பூவையா தனக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்திருப்பதை அறிந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். சிறையில் அவர் சரியாக சாப்பிடாமல் மிகவும் சோர்வாக காணப்படுகிறார்.
உறவினர்களிடம் வாக்குமூலம்
இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களும் சங்கரன்கோவில் கோர்ட்டில் ரகசிய வாக்கு மூலம் அளிக்கின்றனர். அதன்படி வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமியின் மனைவி சரஸ்வதி, மகன்கள் சேதுராமன், செந்தில், மைத்துனர் மகாதேவன் மற்றும் ஒருவர் ஆகியோர் சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் இன்று ஆஜராக கூறப்பட்டிருந்தது.
மனைவி வாக்குமூலம்
அதன்படி இன்று காலையில் சரஸ்வதி சங்கரன்கோயில் குற்றவியல் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முரளிதரகண்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். மாஜிஸ்திரேட்டிடம் சரஸ்வதி சுமார் அரைமணிநேரம் ரகசியமாக வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலம் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன.
மிரட்டிய அதிமுகவினர்
அந்த வாக்குமூலத்தில், தனது கணவர் முத்துகுமாரசாமி தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, மிகவும் சோகத்துடன் காணப்பட்டார். சரியாக சாப்பிடவில்லை. மிகுந்த மனசோர்வுடன் இருந்தார். இதுகுறித்து கேட்டபோது, டிரைவர் பணி நியமனம் தொடர்பாக அமைச்சர் மற்றும் நெல்லை அதிமுக பிரமுகர்கள் ரூ.21 லட்சம் கேட்பதாகவும், பணம் கொடுக்கவில்லை என்றால் சும்மா விடமாட்டோம் என்று மிரட்டியதாக கூறினார். இதனையடுத்து தனது பிஎப் பணத்தில் இருந்து ரூ.6 லட்சம் எடுத்து கொடுக்க முன்வந்தார்.
பணம் கொடுக்க முடியலையே
மீதிபணம் கொடுப்பதற்காக நகைகளை அடகு வைக்க வேண்டும் என்று கூறினார். கடந்த பிப்ரவரி 20ம் தேதி ஒருநாள் விடுமுறை எடுத்து விட்டு வீட்டில் இருந்தார். பகல் 11 மணியளவில் நெல்லை சந்திப்பிற்கு செல்வதாக கூறி சென்றார். சுமார் 12 மணியளவில் அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்தது. அமைச்சர், அதிகாரிகள், அதிமுகவினர் கொடுத்த டார்ச்சர்தான் எனது கணவர் தற்கொலை செய்ததற்கு காரணம் என்று வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
கலக்கத்தில் அதிமுகவினர்
முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் அவரது மனைவியும், அமைச்சரின் உதவியாளர் பூவையாவும் அளித்துள்ள வாக்குமூலங்கள் பல அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இந்த வழக்கில் இனி யார் யார் தலை உருளப்போகிறதோ என்று கலக்கத்தில் உள்ளனர் உள்ளூர் அதிமுகவினர்.