வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் பொறியாளர் செந்திலுக்கும் ஜாமீன்!
நெல்லை: வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொறியாளர் செந்திலுக்கும் ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை.
திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறை உதவிச் செயற்பொறியாளராக இருந்த எஸ். முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி தச்சநல்லூர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
வேளாண் பொறியியல் துறையில் வாகன ஓட்டுநர்களை நியமிக்க தலா ரூபாய் 1.75 லட்சம் வசூலிக்குமாறு நெருக்கடி கொடுக்கப்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகப் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து வேளாண் துறை முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அந்தத் துறையின் தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்
இந்நிலையில் வேளாண் துறை தலைமைப் பொறியாளர் செந்திலை மதுரை உயர்நீதிமன்ற கிளை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டது. ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.