முத்துக்குமாரசாமி தற்கொலை: ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தியின் நண்பர் வெங்டேசன் கைது
சென்னை: நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில், மூன்றாவது நபராக, வேளாண் துறை முன்னாள் அமைச்சர், 'அக்ரி' கிருஷ்ணமூர்த்திக்கு நெருக்கமான வெங்கடேசனை, சி.பி.சி.ஐ.டி., போலீசார், கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரைவர்கள் பணிநியமனம் தொடர்பாக அமைச்சரும், அதிகாரிகளும் கொடுத்த மன உளைச்சலினால் வேளாண்மைத்துறை அதிகாரி, முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை விசாரித்து வரும், சி.பி.சி.ஐ.டி., போலீசார், முதற்கட்டமாக வேளாண் துறை தலைமைப் பொறியாளர் செந்தில் மற்றும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கடந்த 5ஆம் தேதி கைது செய்தனர்.
இந்நிலையில், முத்துக்குமாரசாமி தற்கொலைக்கு தூண்டுகோலாக இருந்தார் எனக்கூறி, அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் போல செயல்பட்ட வெங்கடேசன் என்பவரை, சனிக்கிழமை நள்ளிரவில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாஜிஸ்திரேட் முன், ஞாயிறன்று ஆஜர்படுத்தப்பட்ட அவர், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இது குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீஸ் வட்டார தகவல்கள் கூறியதாவது:
முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பாக, அவரின் அலுவலக ஊழியர்கள் மற்றும் உள்ளூர் அ.தி.மு.க.,வினரிடம் விசாரித்ததில், அக்ரி கிருஷ்ணமூர்த்திக்காக, அவருடைய உதவியாளர் என சொல்லி, வெங்கடேசன் என்பவர், தொடர்ச்சியாக அலைபேசியில் பேசிய தகவல் தெரியவந்தது. விசாரித்ததில் வெங்கடேசன், வந்தவாசியில் இருந்து, சென்னைக்கு வந்து, எலக்ட்ரிகல் கான்டிராக்டர் வேலையை செய்து வந்தவர்; ரியல் எஸ்டேட் புரோக்கராகவும் இருந்தவர். நிலம் வாங்குவதில், அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் பழக்கமாகி, அவருடன் நெருக்கமாக இருந்தது தெரியவந்தது.
மிரட்டிய வெங்கடேசன்
இருவருக்கும் நிறைய கொடுக்கல், வாங்கலும் இருந்திருக்கிறது. அந்த வகையில் தான், அக்ரியின் பெயரை சொல்லி, அவர் பல விவகாரங்களில் தலையிட்டு உள்ளார்; அதற்கு, அக்ரியும் உடந்தையாக இருந்துள்ளார்.இப்படி தகவல் கிடைத்ததும், வெங்கடேசனை பின் தொடர ஆரம்பித்தோம். அவர் தொடர்பான எல்லா விவரங்களையும் திரட்டினோம். இதில் முத்துக்குமாரசாமியை, அவர் மிரட்டிய விவரங்கள் தெரியவந்தது. ஆதாரங்களும் கிடைத்தன; உடன், அவரையும் கைது செய்தோம்.
நாங்கள் வெங்கடேசன் குறித்து விசாரிக்கும் போது, தகவல் கசிந்துவிட, திருவண்ணாமலையில் இருக்கும், பீரங்கி வெங்கடேசன் என்ற கட்சிக்காரர் பெயரையும் இணைத்து வதந்திகள் கிளம்பின. அதனால், அவர் குறித்தும் விசாரித்தோம்.சொந்த கட்சி பிரச்னையில், அவரையும் இணைத்து ஆளுங்கட்சியினர் கிளப்பி விட்ட தகவல் என, தெரிந்ததும், அதை விட்டு விட்டோம் என்றனர்.
முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தலைமை பொறியாளர் (பொறுப்பு) செந்தில், வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பிரச்னையில், அடுத்தடுத்தும் கைது படலம் தொடரலாம் என சி.பி.சி.ஐ.டி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.