பிஇ. மாணவர் சேர்க்கை... பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது
சென்னை: பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று துவங்கியது. உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கலந்தாய்வை தொடக்கி வைத்தார். இந்த கலந்தாய்வு ஜூலை 21ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகம் முழுவதும் உள்ள 524 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 92 ஆயிரத்து 9 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மாதம் முதல் நடைபெற்றது.
மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 113 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. இதில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 994 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 3,812 விண்ணப்பங்கள் நீக்கப்பட்டது.
மொத்த தகுதியான விண்ணப்பங்கள், ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 182 பேர். இதில் ஆண்கள் 80 ஆயிரத்து 910 பேர், பெண்கள் 50 ஆயிரத்து 272 பேர். முதல் தலைமுறை பட்டதாரிகள் 69 ஆயிரத்து 575 பேர். இவர்களுக்கான ரேங்க் பட்டியல் கடந்த 22ம் தேதி வெளியிடப்பட்டது.
இதைதொடர்ந்து 24ம் தேதி விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. 25ம் தேதி மாற்று திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
இந்நிலையில் இன்றுமுதல் முதல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இன்று காலையில் அண்ணாபல்கலைக்கழகத்தில் கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தொடக்கி வைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஜூலை மாதம் 21ம் தேதி நிறைவடைகிறது. அடுத்த மாதம் 23, 24ம் தேதிகளில் தொழில் பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதையடுத்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும் மாணவர்களின் வசதிக்காக பல்கலை வளாகத்தில் தனியாக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மாணவிகளுடன் வரும் பெற்றோர் அல்லது சகோதரிக்கு பல்கலைக்கழகத்தில் தங்குவதற்கும் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது.