ஆபாச படம் எடுத்து மிரட்டும் காதலனால் பார்ட் டைம் பாலியல் தொழிலாளியான கோவை மாணவி!
கோவை: உல்லாசமாக இருந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டிய காதலனுக்கு பணம் கொடுக்க விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் கோவை கல்லூரி மாணவி ஒருவர். கோவையில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த மாணவி அளித்த வாக்குமூலம் போலீசார் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கோவை அவினாசி ரோட்டிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து,
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சந்திரமோகன், சந்திரசேகர், ராஜேஸ்வரி, தலைமையிலான தனிப்படையினர் ஹோட்டலுக்குள் அதிரடியாக புகுந்து அங்கிருந்த இன்ஜினியரிங் மாணவி உள்பட 3 பெண்களை பிடித்தனர்.
செல்போன், பணம் பறிமுதல்
அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக கோவைப் புதூர் திருப்பதி நகரைச் சேர்ந்த பிருத்திவிராஜ்(32), அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மனைவி விஜயலட்சுமி(38) ஆகியோரை கைது செய்தனர். விபசாரத்துக்கு பயன்படுத்திய கார், 2 செல்போன்கள், ரொக்கம் 1 லட்சத்து 1,860 ரூபாயை பறிமுதல் செய்தனர். நட்சத்திர ஹோட்டலில் விபசாரத்தில் சிக்கியவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
விபச்சாரத்தில் ஈடுபட்ட இன்ஜினியர்
நட்சத்திர ஹோட்டலில் சிக்கிய பெண்களில் ஒருவர் ஊட்டியைச் சேர்ந்தவர் ஆவார். இன்ஜினியரான அவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். பெண்கள் ஹாஸ்டலில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வருகிறார். திருப்தியான அளவுக்கு சம்பளம் வாங்கும் நீங்கள் ஏன் இப்படி ஒரு தவறான முடிவை எடுத்தீர்கள் என்று போலீசார் கேட்ட போது ‘நான் மிகவும் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டேன்.
அதற்கு நான் வாங்கும் சம்பளம் போதுமானதாக இல்லை. எனவே இந்த தவறான முடிவை எடுத்து விட்டேன். என்னை மன்னியுங்கள். இனிமேல் இதுபோன்ற செயலில் ஈடுபடமாட்டேன் என்று கூறி கண்ணீர் சிந்தியுள்ளார்.
இன்ஜினியரிங் மாணவி
மற்றொரு பெண்ணிடம் விசாரித்தபோது அவர் கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக். படித்து வருவது தெரிய வந்தது. மதுரையைச் சேர்ந்த இவர் அதே கல்லூரியில் படிக்கும் மாணவரை காதலித்திருக்கிறார். இருவரும் நெருங்கி பழகியிருக்கிறார்கள். அப்போது பல்வேறு இடங்களுக்கு சென்று நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். அந்த காட்சியை வாலிபர் மாணவிக்கு தெரியாமலேயே வீடியோ எடுத்திருக்கிறார்.
காதலன் மிரட்டல்
சிறிது காலத்துக்குப் பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். இந்த நிலையில் அந்த மாணவர் மீண்டும் மாணவியை சந்தித்திருக்கிறார். அப்போது ‘நாம் உல்லாசமாக இருந்த காட்சியை வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன். நான் கேட்கும் பணத்தை நீ தர வேண்டும். இல்லாவிட்டால் அதனை இணையதளங்களில் வெளியிடுவேன்' என்று மிரட்டியிருக்கிறார்.
பணத்துக்காக விபசாரம்
இணையதளத்தில் காட்சி வெளியாகிவிடக்கூடாது என்பதற்காக, அந்த மாணவி முதலில் தான் அணிந்திருந்த நகைகளை விற்று கொடுத்திருக்கிறார். அதன் பின்னரும் அந்த மாணவர் தொடர்ந்து பணம் கேட்கவே விபசாரத்தில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அந்த மாணவரிடம் கொடுத்தது தெரியவந்தது.
காப்பகத்தில் பெண்கள்
மற்றொரு பெண் குடும்ப சூழ்நிலை காரணமாக விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறியிருக்கிறார். போலீசாரிடம் சிக்கிய 3 பேரும் கோவையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைதான விபசார கும்பலிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. இணையத்தில் படம் வெளியானால், மானம் போய்விடும் என்று நினைத்த மாணவி, ஏன் தினசரி தனது மானத்தையும், உடலையும் விற்பனை செய்தார் என்ற விஷயம் இன்னும் போலீசாருக்கு பிடிபடவில்லை. அதுகுறித்தும் விசாரித்து வருகின்றனர்.