”மரியாதையா எங்க பிரண்டை கல்யாணம் பண்ணிக்கோ” - கல்லூரி மாணவியை மிரட்டிய 8 பேருக்கு வலை
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் எஞ்சினியரிங் மாணவி ஒருவரை திருமணம் செய்யக் கோரி கொலை மிரட்டல் விடுத்த 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே கோவங்குடி குடியானத்தெருவை சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் பிரசாந்த். இவர், அதே பகுதியை சேர்ந்த 21 வயது எஞ்சினியரிங் கல்லூரி மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த மாணவி பிரசாந்தின் காதலை நிராகரித்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று அந்த மாணவி கல்லூரிக்கு சென்றபோது, பிரசாந்த் மற்றும் இவரது நண்பர்கள் திவாகர், ஹரிஹரன், வெங்கடேசன், மனோகர் ஆகிய 5 பேரும் சேர்ந்து பிரசாந்தை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் பிரசாந்தை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் உனது முகத்தில் ஆசிட் ஊற்றிவிடுவோம் என்று மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும், இவர்களுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த ரமேஷ், எஸ்.என். சேகர், சிவானந்தம் ஆகியோரும் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரம்பூர் போலீசில் மாணவி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி மாணவி மீது ஆசிட் ஊற்றிவிடுவோம் என கொலை மிரட்டல் விடுத்த பிரசாந்த், திவாகர், ஹரிஹரன், வெங்கடேசன், மனோகர், ரமேஷ், சேகர், சிவானந்தம் ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்கள்.