ஜிஎஸ்டி வரி விதிப்பால் சீரழியப்போகும் தமிழ் சினிமா!
சென்னை: ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக இனிமேல் தமிழ் சினிமா உலகத்தை ஆங்கில பேய் பிடித்து ஆட்டப்போகிறது.
2006ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு வரலாற்று சிறப்புமிக்க ஒரு உத்தரவை பிறப்பித்தது. தமிழில் திரைப்படங்களுக்கு பெயர் வைத்தால் அந்த படங்களுக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்பதுதான் அந்த உத்தரவு.
ஜென்டில்மேன், ஃப்ரெண்ட்ஸ், விஐபி, சிட்டிசன் என எந்த மொழி திரைப்படம் என அறிய முடியாதபடிக்கு பெயர் வைத்து படத்தை வெளியிட்ட தமிழ் படைப்பாளிகள், வரி விலக்கிற்காக தமிழில் பெயர் சூட்ட ஆரம்பித்தனர்.
தமிழ் பற்று
இந்த ஆரோக்கிய போக்கால், இந்தியாவே தமிழக சினிமாத்துறையை உற்று பார்த்தது. தமிழர்களுக்கு மொழி மீதான பற்று உள்ளதாக சிலாகித்தது. வரி விதிப்பில் இருந்து விலக்கு பெறுவதற்காகவே இவ்வாறு தலைப்பிட்டாலும் கூட தமிழ் பெயர்களில் படங்கள் வெளியானதால் பட்டி தொட்டி முதல் படித்தவர் வரையில் தமிழ் உச்சரிப்பு இயல்பாக கட்டாயமானது.
ஜெயலலிதாவும் ஆதரவு
2011ல் ஜெயலலிதா தலைமையிலான அரசு, இந்த உத்தரவை மேலும் மெருகேற்றி, தமிழில் தலைப்பு வைத்தால் மட்டும்போதாது, அனைவரும் பார்க்க கூடிய படமாகவும் இருக்க வேண்டும், அதாவது யூ சர்டிபிகேட் பெற வேண்டும் என்ற நிபந்தனையை புகுத்தி, அரசாணையாகவும் அதை வெளியிட்டது. வரி விலக்கு அளிப்பதில் கட்சி பேதம் பார்க்கப்படுவதாக அவ்வப்போது புகார்கள் வந்தாலும், அவை கோர்ட் மூலம் தீர்க்கப்பட்டன. உதயநிதி ஸ்டாலினின், மனிதன் திரைப்படம் அதற்கு ஒரு உதாரணம்.
தமிழ் தேவையில்லை
ஆனால் இப்போது நாடு முழுக்க ஒரே மாதிரி வரி விதிப்பான ஜிஎஸ்டி ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதன்பிறகு, எந்த மொழி திரைப்படமாக இருந்தாலும், என்ன தலைப்பாக இருந்தாலும், ஒரே மாதிரி 28 சதவீதம் வரி விதிக்கப்படும். எனவே தமிழில்தான் தலைப்பு வைக்க வேண்டும் என்ற கட்டாயம் இப்போது இயக்குநர்களுக்கு இல்லை.
தமிழுக்கான தேடல்
வரி விலக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என பீட்சா திரைப்படத்திற்கு அதே தலைப்பு வைக்கப்பட்டது. படத்தின் கதையுடன் அது ஒன்றுவதால் அந்த தலைப்பை தயாரிப்பு தரப்பு மாற்றவில்லை. லென்ஸ் திரைப்படமும் அவ்வாறே. இது அரிதான நிகழ்வு. பெரும்பாலும் கஷ்டப்பட்டு, வேறு பெயரை சூட்டவே செய்தனர். ரோபோ எந்திரனாக மாறியது. பவர் பாண்டி என்பது பா பாண்டி என மாறியது.
இயக்குநர்கள் குஷி
தமிழ் ஆர்வலர்களுக்கு இது மோசமான சூழல் என்றபோதிலும், திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கதைக்கு தேவைப்படும் தலைப்பை வைத்துக்கொள்ளலாம் என்பதும், மொழிக்கு மொழி பெயரை மாற்ற தேவையில்லை என்பதும் அவர்கள் மகிழ்ச்சிக்கு காரணம்.