என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா... லட்சுமி ராமகிருஷ்ணனின் புது ஐடியா!
சென்னை: தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசிய ‘என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா' என்ற வாக்கியம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலம். எனவே, அந்த வாக்கியத்தினை வைத்து புதிய நிகழ்ச்சி ஒன்றைத் தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறாராம் லட்சுமி ராமகிருஷ்ணன்.
‘என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா' என நிகழ்ச்சி ஒன்றில் எதேச்சையாகத் தான் சொன்னார் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனால், அதனை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட நெட்டிசன்கள் அந்த வாக்கியத்தைப் பிரபலப் படுத்தி விட்டார்கள்.
சிறுகுழந்தைகள் முதற்கொண்டு ‘என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா' எனக் கூறும் அளவிற்கு அந்த வாக்கியம் தற்போது மிகவும் பிரபலம்.
புதிய விவாத நிகழ்ச்சி...
இந்நிலையில், இந்த பிரபலத்தை தனக்கு சாதகமாகப் பயன் படுத்த முடிவு செய்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த வாக்கியத்தையே தலைப்பாகக் கொண்டு நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பிக்க அவர் முடிவு செய்துள்ளாராம்.
இளைஞர்களுக்கானது...
அது இளைஞர்கள் பங்குபெறும் விவாத நிகழ்ச்சியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மூன்று பெண்களுக்குத் தாயான தனக்கு இன்றைய இளைஞர்களுக்கு என்ன மாதிரியான பிரச்சினைகளை தாண்டி வருகிறார்கள் எனத் தெரியும் என பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் பிரச்சினை...
எனவே, அவற்றைக் குறித்த விவாத நிகழ்ச்சியாக அது இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
சீரியசா பேசினேன்...
மேலும், அவர் செல்லும் இடங்களிலெல்லாம் ஒருமுறையாவது அவரை அந்த வாக்கியத்தைச் சொல்லச் சொல்லிக் கேட்கிறார்களாம் மக்கள். சீரியசாக தான் கூறியது இவ்வாறு பிரபலம் ஆகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இயக்கம்...
ஏற்கனவே, இரண்டு திரைப்படங்களை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.