வாளி போய்.. சுடு நீர் .. எண்ணூர் எண்ணெய் படலம் சுடுதண்ணீர் ஊற்றி அகற்றம்… மீண்டும் தொடங்கியது பணி
அகற்றப்படாமல் எண்ணூர் கடற்பகுதியில் உள்ள பாறைகளில் படிந்திருந்திருக்கும் எண்ணெய் படலம் சுடுநீர் ஊற்றி அகற்றப்பட்டு வருகிறது. 4 நவீன கருவிகளும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
சென்னை: சென்னை எண்ணூரில் மீண்டும் எண்ணெய் படலங்களை அகற்றும் பணி தொடங்கி உள்ளது.
கடந்த மாதம் 28 தேதி எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்டன. இதில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் சேதமடைந்து எண்ணெய் கடலில் கொட்டியது.
இதனால் எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை எண்ணெய் படலம் பரவியது. கடல் மாசடைந்து மீன், நண்டு உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் செத்து மிதந்தன.
நீயா.. நானா..
கடலில் டன் கணக்கில் கொட்டிய எண்ணெய்யை அகற்றுவது யார் என்ற போட்டா போட்டி நிர்வாக மட்டத்தில் எழுந்தது. துறைமுக நிர்வாகம் எண்ணெய்யை அகற்ற வேண்டுமா அல்லது கடலோரக் காவல்படை இதனை அகற்ற வேண்டுமா என்ற போட்டியில் மேலும் காலதாமதம் ஆனது. பின்னர் ஒரு முடிவிற்கு இரண்டு நிர்வாகமும் எண்ணெய்யை அகற்றும் பணிகளை செய்தன.
வாளியில் அள்ளிய எண்ணெய்
10 நாட்களுக்கும் மேலாக 1000க்கும் மேற்பட்டோர் எண்ணெய் அகற்றினார். ஏதோ நவீன கருவிகள் கொண்டு அகற்றப்பட்டது என்று தவறாக நினைக்க வேண்டாம். கடலில் கொட்டிய எண்ணெய்யை வாளிகளில் மொண்டு ஊற்றி அகற்றப்பட்டது.
முழுவதுமாக எண்ணெய் அகற்றப்பட்டதா?
எண்ணூர் பகுதியில் இருந்து முற்றிலுமாக எண்ணெய் அகற்றப்பட்டது என்று அரசு அறிவித்தது. அதற்கான புகைப்படங்களும் வெளியானது. ஆனால், கடலூர், புதுச்சேரியில் உள்ள காரைக்கால் ஆகிய பகுதிகளில் கடலில் எண்ணெய் கழிவு மிதந்தன. மேலும், அந்தப் பகுதியில் கடற்கரையோரங்களில் எண்ணெய் படிந்து அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது சுடுநீர் ஊற்றி..
எண்ணூர் பாறைகளில் படிந்திருக்கும் எண்ணெய்யும் முற்றிலுமாக அகற்றப்படவில்லை. இந்த எண்ணெய்யை அகற்றும் பணிகள் இன்று தொடங்கின. எண்ணெய் படலங்கள் சுடுநீர் ஊற்றி அகற்றப்பட்டு வருகிறது. மேலும் 4 நவீன இயந்திரங்களுடன் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கழிவுகளை அகற்றி வருகின்றனர்.