எண்ணூர் துறைமுக பங்குகளை விற்க கூடாது… மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு ஸ்டாலின் கடிதம்
எண்ணூர் துறைமுக பங்குகளை விற்கக் கூடாது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: பொருளாதாரத்தை கட்டமைக்கும் முக்கிய துறைமுகமான காமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்கக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
எண்ணூர் துறைமுகம் 2001ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று சுமார் ரூ.20,000 கோடி மதிப்பு கொண்டதாக இந்தத் துறைமுகம் வளர்ந்துள்ளது. இந்நிலையில், இத்துறைமுகத்தின் பங்குகளை முழுமையாக தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு அதன் ஊழியர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஒருதலைபட்சமாக முடிவெடுக்கும் முன்னர் தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், பொருளாதாரத்தை கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றி வரும், காமராஜர் துறைமுகத்தின் பங்குகளை 100 சதம் விற்கக் கூடாது என்று அந்தக் கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.