லாபகரமான எண்ணூர் துறைமுகத்தை தனியாருக்கு விற்பது ஏன்?.... டி.ஆர். பாலு கேள்வி
சென்னை: லாபகரமாக இயங்கி வரும் எண்ணூர் துறைமுகத்தை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு துடிப்பது ஏன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
எண்ணூர் துறைமுகம், ஹிந்துஸ்தான் லைப்கேர், இந்தியா பார்மாகுட்டிகல்ஸ் உள்ளிட்ட 4 பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு நாடாளுமன்ற நிலைக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
எண்ணூர் துறைமுகத்துக்கு மத்திய அரசு சார்பில் 68 பங்குகளும், துறைமுக பொருளாதார துறைக்கு 32 பங்குகளும் உள்ளன. மத்திய அரசிடம் உள்ள மொத்த பங்குகளையும் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தூர்வாரும் கழகத்தில்
மேலும் இந்திய தூர்வாரும் கழகத்தில் 73.47 சதவீதம் பங்கு உள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.15,000 கோடி வருவாய் கிடைத்தது. ஏலம் விடுவதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருணாநிதி இடம் வழங்கினார்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் டி.ஆர்.பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 1996-ஆம் ஆண்டு மின்சார வாரியம், பெருவளர்ச்சி குழுமம் ஆகியவை இணைந்து எண்ணூர் துறைமுகத்துக்கு இடம் வழங்கியது.
மிகப் பெரியதாகும்
பின்னர் கடந்த 2001- இல் வாஜ்பாயும், கருணாநிதியும் தொடக்க விழா நடத்தி வைத்தனர். அந்த இடத்தின் மதிப்பு மட்டும் ரூ.15,000 கோடியாகும். 12 மிகப் பெரிய பொது துறை நிறுவனங்களில் எண்ணூர் துறைமுகம் மிகப் பெரியதாகும்.
பணமுதலைகளுக்கு
கடந்த 6 ஆண்டுகளாக மிகவும் லாபகரமாக இயங்கி வரும் துறைமுகத்தை இப்படி அவசர அவசரமாக மத்திய அரசு விற்க துடிப்பது ஏன். மத்திய அரசுக்கு நெருக்கமான பண முதலைகளுக்கு வெள்ளித் தட்டில் வைத்து துறைமுகத்தை தாரை வார்க்க மத்திய அரசு விரும்புகிறது. தங்கள் தயவில் உள்ள அதிமுக அரசு எதையும் தட்டி கேட்காது என்று தைரியமா? என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.