ஜெயலலிதா மரணம் தொடர்பாக 3 மாதத்தில் விசாரணை அறிக்கை... தமிழக அரசு அரசாணையில் உத்தரவு
ஜெயலலிதா மரணம் தொடர்பாக 3 மாதத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு அரசாணையில் வெளியிட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் 3 மாதத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு தனது அரசாணையில் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாள்கள் சிகிச்சை பெற்ற அவர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்துவிட்டார்.
இதுதொடர்பாக பொதுமக்களிடையே பெரும் சந்தேகங்கள் சமூக வலைதளங்களில் உலா வந்தன. இந்நிலையில் அவர் மரணம் குறித்த சந்தேகங்களை போக்க தமிழக அரசு விசாரணை கமிஷனை அமைத்தது. அதன் தலைவராக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை நியமித்தது.
இந்நிலையில் விசாரணை கமிஷன் அமைத்தது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் விசாரணை கமிஷன் தனது விசாரணை அறிக்கையை வரும் 3 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் மரணமடைந்த நாள் வரை நடந்தவை அனைத்தையும் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.