எந்திரன் கதை வழக்கு.. கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் தரப்பு மீண்டும் வாய்தா!
சென்னை: ரஜினி நடித்த எந்திரன் கதை உரிமை வழக்கில் கலாநிதி மாறன் தரப்பும் ஷங்கர் தரப்பும், மீண்டும் வாய்தா கேட்டுள்ளது. இதையடுத்து ஜூன் 23-ந் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
எந்திரன் படத்தின் கதை தன்னுடைய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது என்று கூறி, ரூ 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஆரூர் தமிழ் நாடன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி எம்.வி.முரளிதரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வழககறிஞர்களும் ஆஜராகி தங்கள் வாதங்களை எடுத்துவைத்தனர். வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டார். இதையடுத்து கலாநிதி மாறன் தரப்பும் ஷங்கர் தரப்பும், மீண்டும் வாய்தா கேட்டது.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கை, வரும் ஜூன் 23-ந் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி. இதனால் வழக்கு மனுதாரர் ஆரூர் தமிழ்நாடனுக்கு சாதகமாக முடியும் சூழல் ஏற்பட்டுள்ளது.